'திராவிட மாடல்'.. இந்தியா வளர்ச்சியடைய இதை பின்பற்றுங்கள்.. நாடாளுமன்றத்தில் உரக்க பேசிய திமுக எம்.பி
டெல்லி: இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் தமிழகத்தில் பின்பற்றப்படும் 'திராவிட மாடலை' பின்பற்ற வேண்டும் என திமுக எம்.பி செந்தில்குமார் நாடாளுமன்ற மக்களவையில் பேசியுள்ளார். தமிழக அரசின் நீட் தேர்வு மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பிய நிலையில் திமுக எம்.பி இவ்வாறு பேசியுள்ளார்.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மக்களவையில் பேசிய ராகுல் காந்தி மத்திய அரசை மிக கடுமையாக தாக்கினார். தமிழகத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார்.
பிரதமரை கிண்டல் செய்த காமெடி வீடியோ நீக்கம்.. முடங்கி மீண்ட திமுக எம்.பி. செந்தில்குமார் ட்விட்டர்
திருக்குறளில் கூறியதை பாருங்கள்
இந்த நிலையில் தருமபுரி தொகுதி எம்.பியான செந்தில்குமார் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் மீது பேசினார். அப்போது அவர் , 'குடியரசுத் தலைவர் உரையில் 'கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' என்ற திருக்குறள் சொல்லப்பட்டிருக்கிறது இத்திருக்குறளின் அர்த்தம் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது. தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் நம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உயரிய லட்சியங்களை கடைபிடிக்கின்றனவா? என எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
அலங்கார ஊர்தி நிராகரிப்பு
ஜிஎஸ்டி வரி வசூலில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீடுகளை மாநிலங்களுக்கு பல மாதங்களாக கொடுக்கப்படாமல் நிலுவை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டு உட்பட தமிழ்நாட்டிற்கு 16 ஆயிரத்து 725 கோடி ஜிஎஸ்டி நிலுவையில் உள்ளது. அதை எப்போது வழங்க போகிறீர்கள்?. என்றும் அவர் தெரிவித்தார். குடியரசு தலைவா் உரையில் தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் அவர்களைப் பற்றிய குறிப்பும் காணப்பட்டது. ஆனால் குடியரசு தின அணிவகுப்பில் எங்கள் மாநில அலங்கார ஊர்தியில் வைக்கப்பட்ட கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார் நிராகரிக்கப்பட்டுள்ளனர்
காவி உடை அணிந்த மனிதர்கள் நியாயமா?
இவர்களுக்கு பதிலாக அணில், மனித தலையுடன் கூடிய மாட்டின் உடல், காவி உடை அணிந்த மனிதர்கள் ஆகியவைதான் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் அனுமதிக்கப்பட்டன என்று செந்தில்குமார் எம்.பி குற்றம்சாட்டினார். குடியரசு தின விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட அந்த அலங்கார ஊர்தி தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் செல்கிறது. இவற்றை மக்கள் பெருமிதத்தோடு வரவேற்றனர். ஐந்து நிமிட நிகழ்வை ஒரு மாத நிகழ்வாக நீங்கள் மாற்றியுள்ளீர்கள் என்றும் அவர் கூறினார்.
நீதிபதிகளின் தீர்ப்பு
சமீபத்திய காலங்களில் சில இடங்களில் நீதிபதிகள் இந்தி படங்கள் மற்றும் தமிழ் திரைப்படங்களில் குறிப்புகளை மேற்கோள்காட்டி தீர்ப்பு வழங்கிவருகின்றனர். இது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது என்று கூறிய செந்தில்குமார் எம்.பி சட்டக்கல்லூரி மாணவர்கள் நீதிமன்றம் மற்றும் நூலகங்களுக்கு, தீர்ப்புகளை தேடிச்சென்று சட்டம் படிக்கிறார்கள். இந்நிலையை மாற்றி, அந்த மாணவர்கள் திரையரங்குகளிலும், ஒ.டி.டி தளங்களுக்குச் சென்று சட்டம் கற்க வேண்டும் என இந்த நீதிமன்றம் விரும்புகிறதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
திராவிட மாடல்
தேசிய கல்விக் கொள்கையில் இந்த அரசாங்கத்தின் முக்கிய இலக்கில் ஒன்று, உயர்கல்வியில் 2035ம் ஆண்டு மொத்த பதிவு விகிதத்தை 50 சதவீதம் உயர்த்துவது. ஆனால், தமிழ்நாடு தற்போதே 50 சதவீதத்தை எட்டியுள்ளது. பல அமெரிக்க மாகாணங்களை விட தமிழகம் மொத்த பதிவு விகிதத்தில் முன்னேறி உள்ளது. இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் தமிழகத்தில் சமூக - பொருளாதார தளங்களில் வெற்றியைக் கண்ட திராவிட மாடலை பின்பற்றுங்கள். அதை விட்டுவிட்டு 20 வருடம் முன்னேறிச் சென்று விட்ட ஒரு மாநிலத்தின் மீது, புதிய கல்விக் கொள்கையை திணிப்பது சரியல்ல என்றும் திமுக எம்.பி கூறினார்.
Recommended Video
ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார்
அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய அவர் , ''மு.க.ஸ்டாலின் அடிப்படையில் இணக்கமான நபர். அவர் வார்த்தைகளை குறைத்துக்கொண்டு செயலில் அதிகம் ஈடுபடுவார். சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார். தமிழகத்தை இந்தியாவில் இருக்கும் மாநிலத்தில் ஒப்பிட்டு போட்டி போடாமல் உலக நாடுகள் ஒப்பிட்டு தமிழகத்தை அனைத்து தளங்களிலும் முன்னேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் திட்டமிடுகிறார்" என்று செந்தில்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.