'நாட்டில் எதிர்க்கட்சி வலுவாக இல்லை.. அதனால்தான் நாங்கள் போராடுகிறோம்..' விவசாயிகள் வேதனை
டெல்லி: நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட், எதிர்க்கட்சிகள் வலுவாக இருந்திருந்தால் விவசாயிகள் இத்தனை காலம் போராட்டம் நடத்தும் சூழ்நிலையே உருவாகியிருக்காது என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
24/7 முகாம்.. செப்டம்பருக்குள் 70 கோடி பேருக்கு வேக்சின் முதல் டோஸ்.. நிதியமைச்சகம் நம்பிக்கை
இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தும் ராகேஷ் டிக்கைட்டை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்தார்.
எதிர்க்கட்சிகள் பலவீனம்
அதைத் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகேஷ் டிக்கைட், "நாட்டில் எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமாக உள்ளது. இதைத்தான் நான் மம்தாவிடமும் கூறினேன்.
வலுவான எதிர்க்கட்சி தேவை
நாங்கள் விவசாயிகள் பல மாதங்களாகச் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறோம். எதிர்க்கட்சிகள் வலுவாக இருந்திருந்தால் நாங்கள் இதைச் செய்திருக்கத் தேவையில்லை. நமக்கு முதலில் இப்போது வலுவான ஒரு எதிர்க்கட்சி தேவை. வழக்கமாக அனைத்து மாநில முதல்வர்களை சந்தித்ததைப் போலவே மம்தாவையும் சந்தித்தோம். அடுத்து விரைவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் நேரில் சந்திக்கவுள்ளோம்
மம்தா பானர்ஜி
ஆனால் முதலில் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் போராட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். மேற்கு வங்கம் ஒரு முன் மாதிரி மாநிலமாக இருக்க வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான சலுகைகளையும் உரிமைகளையும் மேற்கு வங்க முதல்வர் வழங்குவார் என நம்புகிறோம்" என்று அவர் கூறினார்.
தொடரும் போராட்டம்
விவசாய சட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. விவசாய சட்டத்தை வாபஸ் பெற முடியாது என மத்திய பாஜக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளதால் பல மாதங்களாகப் போராட்டங்கள் தொடர்கிறது.