ரெஸ்ட் எடுக்காமல் வெளுக்கும் மழை.. வெள்ளக்காடான கர்நாடகம், கேரளம்.. இருக்காம்.. இன்னும் இருக்காம்!
டெல்லி: கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா, மத்தியப்பிரதேசம், குஜராத் ஆகிய இடங்களில் அடுத்த 2 நாட்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக் கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. அதோடு தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் உள்ள மாவட்டங்களிலும் கனமழை பெய்கிறது.
கேரளத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து பாலகாடு மாவட்டத்தில் பட்டாம்பி பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் முவட்டுபுழா நகரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது.
கர்நாடகாவை புரட்டி எடுக்கும் மழை.. ஒரே நாளில் 9 பேர் பலி.. 4 மாவட்டங்களில் வெள்ளம்!
ரெட் அலர்ட்
ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சக்குளத்துகாவு கோயில் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் இன்றும் கேரளாவில் வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
காவிரியில் வெள்ளம்
அது போல் கர்நாடகத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதில் ஒரே நாளில் 9 பேர் பலியாகிவிட்டனர். மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக தற்போது காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
20 ஆயிரம் கனஅடி
கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதே நிலை நீடித்தால் மதியம் ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அது போல் தாரகா, நுகு அணைகளிலிருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
வெள்ளநீர் சூழ்ந்தது
சிவமோகா மாவட்டத்தில் மழைநீரின் அளவு குறைந்ததை அடுத்து சந்தம்மா லேஅவுட்டில் வெள்ளநீர் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். மைசூர்- மடிகேரி, மைசூர்- எச்டி கோட்டே இடையேயான சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்திய வானிலை மையம்
மகாராஷ்டிரத்தில் உள்ள கிருஷ்ணா மற்றும் பீமா ஆறுகளில் இருந்து ஏராளமான நீர் திறந்துவிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பீஜாப்பூர், பாகல்கோட் மாவட்டங்கள் பாதிக்கப்படும். இந்த நிலையில் கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா, மத்தியப்பிரதேசம், குஜராத் ஆகிய இடங்களில் அடுத்த 2 நாட்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக் கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.