தொடர்ந்து அதிகரிக்கும் கோதுமை விலை..ஏற்றுமதிக்கு அதிரடியாக தடை விதித்த இந்தியா.. என்ன காரணம் தெரியுமா
டெல்லி: இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப். மாதம் இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்தது. சுமார் 2 மாதங்களைக் கடந்தும் இந்தப் போர் தொடர்ந்து வருகிறது.
இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளில் இருந்து வரும் பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
தாஜ்மஹால் இந்து கோயிலா? உள்ளே இருப்பதாக கூறப்படும் 22 அறைகளின் மர்மம் இதுதான்
இதனால் உலக நாடுகளில் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி போர் காரணமாக இரு நாடுகளில் இருந்து வரும் கோதுமை தடைப்பட்டுள்ளன.
இதன் காரணமாக எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்குத் திட்டமிட்டிருந்தன. தனியார் ஏற்றுமதி நிறுவனங்களும் விவசாயிகளிடம் இருந்து கோதுமையைக் கொள்முதல் செய்து, அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தன.
தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு வாங்குவதால் விவசாயிகள் அரசு கொள்முதலுக்குக் கோதுமை தருவதைக் கடந்த சில மாதங்களாகவே குறைத்து இருந்தனர். இதையடுத்து கடந்த 2 மாதமாகக் கோதுமை விலை நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இந்தச் சூழலில் இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டில் விலை ஏற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதிகளவு ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.