டோக்லாமில் 73 நாட்கள் விடாமல் முரண்டு பிடித்த சீனா.. லடாக்கில் 60 நாட்களில் வாலை சுருட்டியது!!
டெல்லி: இந்தியா, சீன எல்லையில் கல்வான் பகுதியில் மூன்று வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் சீன வீரர்களால் பலி வாங்கப்பட்ட நிலையில், தற்போது ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து 2 கி. மீட்டர் தொலைவிற்கு சீனப் படைகள் இன்று பின்வாங்கி உள்ளது.
Recommended Video
அதாவது லடாக்கில் முரண்டு பிடித்து முகாம் அமைத்து இருந்த சீனப் படைகள் 60 நாட்களுக்குப் பின்னர் பின் வாங்கியுள்ளன. இதற்குக் காரணம் நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரடியாக களமிறங்கி பேசியதை அடுத்த சீனா இன்று பின் வாங்கியுள்ளது.
கல்வான் பகுதியில் அமைத்து இருந்த கூடாரங்களையும் காலி செய்து சென்றதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. லடாக்கில் 60 நாட்கள் பிடித்த சீனாவுக்கு, டோக்லாமில் இருந்து காலி செய்ய 73 நாட்கள் பிடித்தது.
இருநாடுகளுக்கும் இடையே லடாக்கில் ஒரு எல்லைக்கோடு உள்ளது. அதைத் தாண்டி வரக்கூடாது என்ற புரிதலின் பேரில், சீனா இன்று பின்வாங்கியது. இருதரப்பும் தங்களது இடங்களை இன்று ஆய்வு மேற்கொண்டு உறுதிபடுத்திக் கொண்டன. கல்வான் பகுதியில் இருதரப்புக்கும் இடையே சர்ச்சை எழுந்ததில் இருந்தே, மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியும் லடாக் பகுதிக்கு சென்று இருதரப்பு சண்டையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை சந்தித்து உற்சாகம் அளித்து, நலம் விசாரித்தார்.
தற்போதைக்கு எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து சீன ராணுவம் பின் வாங்கினாலும், குளிர் காலத்தில் இந்தப் பகுதியில் அதாவது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மீண்டும் தாக்குதலை மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. 2017ல் இந்தியா, பூட்டான், சீனா எல்லையில் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் 73 நாட்கள் முகாமிட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சீன ராணுவம் பின் வாங்கியது.
இந்தியா சீனா சச்சரவு துவக்கமும் - பின் வாங்கலும்:
- மே 5, 6 ஆகிய தேதிகளில் பாங்காங் டிசோ என்ற இடத்தில் சீனா ஊடுருவி இருந்தது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே இங்கு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, சிக்கிமில் இருக்கும் நாக்கு லா என்ற இடத்தில் சீனா தனது வேலையைக் காட்டியது. 150 வீரர்கள் இங்கு கைகலப்பில் ஈடுபட்டதாகவும், இருதரப்பிலும் வீரர்கள் காயம் அடைந்தனர் என்றும் கூறப்பட்டது.
- மே 12ஆம் தேதியில் இருந்து சீனாவின் கவனம் பாங்காங் டிசோ பகுதியில் இருந்து கல்வான் பகுதிக்கு மாறியது. மே மாதம் 19ஆம் தேதியும், கல்வான் பகுதியில் சீனா தனது முழு கவனத்தை செலுத்தியது. சர்ச்சைக்குரிய பகுதியை தாண்டி இந்தியப் பகுதிக்குள் சீனப் படைகள் நுழைந்தது. முகாம்களை அமைத்தது. ஆனால், இந்திய ராணுவம்தான் எல்லையை மீறியதாக சீன ராணுவம் குற்றம்சாட்டியது.
- சீனாதான் எல்லை மீறி இருக்கிறது. இருநாடுகளுக்கும் எல்லையில், பஃபர் சோன் எனப்படும் இடம் உள்ளது. இருவருக்கும் இடைப்பட்ட இந்தப் பகுதியில் தினமும் ரோந்துப் பணிகளை இருவரும் மேற்கொள்ளலாம். இருவரும் எல்லைகளை மீறாமல் இருப்பதற்கு இதுதான் ஒரு பாதுகாப்பு இடமாக கருதப்படும். ஆனால், சீனா அந்த இடத்தைக் கடந்து இந்தியப் பகுதிக்குள் ஊடுருவி இருந்தது. ஏறக்குறைய 16 கி. மீட்டர் ஊருடுருவி இருந்ததாக கூறப்பட்டது.
- இதையடுத்து லே பகுதியில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள ராணுவ தளபதி எம்எம் நரவானே செல்கிறார் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்து இருந்தார்.
- இதையடுத்தும் சீனா அந்த இடத்தில் இருந்து பின் வாங்கவில்லை. இந்தியப் பகுதிக்குள் ஊடுருவி இருப்பது மேலும் உறுதியானது. எதிரி நாட்டின் ராணுவத்துக்கு இணையாக இந்திய வீரர்களும் களத்தை எதிர்கொள்வார்கள் என்று ராஜ்நாத் சிங் அறிவித்தார். இந்தியா சிறிதும் பின் வாங்கவில்லை.
- கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் 2017ல் இந்தியா, பூட்டான், சீனா எல்லையில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பு செய்து இருந்தது. டோக்லாம் பூட்டானுக்கு சொந்தமானது என்றாலும், இந்தியாவுக்கும் இந்த எல்லைப் பகுதி மிகவும் முக்கியமானது. டோக்லாம் வழியாக அருணாசலப்பிரதேசத்திற்குள் சீனா எளிதாக நுழையலாம். இதனால், இந்த விவகாரத்தில் பூட்டானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எப்போதும் எடுக்கிறது. சிக்கன் நெக் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில்தான் சிலிகுரி சாலை அமைந்துள்ளது. மேற்குவங்கத்தில் இருந்து இந்த சாலை வடகிழக்கு இந்திய மாநிலங்களை இணைக்கிறது. இந்த சாலை பூட்டான், நேபாளம், சிக்கிம், வங்கதேசம், டார்ஜிலிங் ஹில்ஸ், வடகிழக்கு இந்தியா மாநிலங்களை இணைப்பதாக இருக்கிறது. இங்கு ஏற்பட்ட சிக்கலின்போது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என்று இந்தியா மிரட்டல் விடுத்தது. பின்னர் பேச்சுவார்த்தை மூலம் முடித்துக் கொள்ளப்பட்டது. மொத்தம் இங்கு சீனப் படைகள் 73 நாட்கள் முகாமிட்டு இருந்தது.
களமிறங்கிய அஜித் தோவல்.. ஒரே வீடியோகால்.. எல்லையில் பின்வாங்கிய சீன படை.. நேற்று நடந்தது என்ன?
- ஜூன் 9ஆம் தேதி இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை ஏற்பட்டது. சீனா பின்வாங்க ஒப்புதல் தெரிவித்தது. இதையடுத்து இருதரப்பும் தங்களது எல்லைப் பகுதிகளில் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், சீனா ஒப்புக் கொண்டபடி பின் வாங்கவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.
- இந்திய தரப்பில் சர்ச்சைக்குரிய பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு சீனா ஒப்புக் கொண்டவாறு முகாம்களை அகற்றவில்லை. பின் வாங்க மறுத்துவிட்டது.
- ஜூன் 15ஆம் தேதி இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இது தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சீனா தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பை அந்த நாடு இன்று வரை உறுதி செய்யவில்லை. ஆனால், 40 பேர் உயிரிழந்ததாக சில செய்திகளில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
- இந்திய ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கண்டித்து இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இருந்தது. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவை கண்டிக்கும் வகையில் (கராச்சி பங்குச் சந்தை மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக) சீனா கொண்டு வந்து இருந்த தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் இரண்டு முறை அமெரிக்காவும், ஜெர்மனும் தடையை ஏற்படுத்தின. உலக அரங்கில் சீனா தனிமைப்படுத்தப்பட்டது. இதையடுத்து, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நேற்று (ஞாயிற்றுக்கிழமை)நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது. அதன்படி இன்று சீனா ஏறக்குறைய 2 கி. மீட்டர் தூரத்திற்கு பின் வாங்கியது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரடியாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன் ஈடுபட்டார். இதையடுத்து இன்று சீனப் படைகள் சண்டை நடந்த பகுதியில் இருந்து வாபஸ் பெற்றன.
- இதற்கு முன்னதாக 59 சீன செயலிகளை இந்தியா தடை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.