தமிழகத்துக்கு பீக் வந்தாச்சாம்.. இந்தியாவுக்கு எப்ப வரும்.. எஸ்பிஐ நடத்திய அதிரடி சர்வே!
இந்தியாவில் கொரோனாவைரஸ் உச்சத்தை எட்டும் என எஸ்பிஐ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது
டெல்லி: ஸ்டேட் வங்கியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் ஒரு சர்வேயை எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில் தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் கொரோனாவைரஸ் பீக் வந்து விட்டதாகவும் மொத்த இந்தியாவுக்கும் விரைவில் பீக் வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
பீக் வரும் சமயத்தில் இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். அதேசமயம், அமெரிக்காவில் 2 முறை கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டதை நாம் மறந்து விடக் கூடாது. நமக்கும் கூட அப்படி நடந்தாலும் நடக்கலாம் என்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
உலகை இன்னும் போட்டு உலுக்கிக் கொண்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு.. இந்தியாவிலும் இது ஓய்ந்த பாடில்லை... எப்போது உச்சம் வரும் என்பதும் யாருக்கும் தெரியவில்லை... உச்சம் வந்த பிறகாவது அது ஒழிந்து போய் விடுமா என்பதற்கும் உத்தரவாதம் இல்லை... இது சமூக பரவல் இல்லை என்றும் அரசு கூறி வருகிறது. ஆனால் யாரை பார்த்தாலும் கொரோனா பாதிப்பாகவே உள்ளது.
ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடம்- ஒரே நாளில் 69,196 பேருக்கு தொற்று உறுதி
ஆய்வு
இப்படிப்பட்ட குழப்பமான நிலையில்தான் ஸ்டேட் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அதில் சில முக்கிய தகவல்களை, புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளனர். அதன்படி விரைவில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் என்று அவர்கள் கணித்துள்ளனர்.
3-வது இடம்
உலக அளவில் அதிக வேகமாக கொரோனா பரவும் நாடுகள் வரிசையில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. 30 லட்சம் என்ற பாதிப்பு எண்ணிக்கையை நெருங்கி வருகிறது. அதேசமயம், மீண்டு வருவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதன் மூலம் அது பீக்கை நெருங்கி வருவதாக அனுமானிக்க முடிகிறது. சில மாநிலங்களில் ஏற்கனவே உச்சம் வந்து விட்டாலும் கூட பல மாநிலங்களில் அது இன்னும் வரவில்லை.
புதிய கேஸ்கள்
கடந்த 15 நாட்களில் இந்தியாவில் 10 லட்சம் புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. ஜூலை 30ம் தேதி முதல் இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 58,000 கேஸ்கள் ஏற்பட்டு வருகின்றன. உச்சத்தைத் தொடும்போது இந்த எண்ணிக்கையானது 75,000 என்ற அளவில் இருக்கும். தற்போது இந்தியாவில் மீண்டு வருவோர் எண்ணிக்கை 71 சதவீதமாக உள்ளது. உச்சத்தைத் தொடும்போது இது 75 சதவீதமாக இருக்கலாம்.
மேற்கு வங்கம்
உச்சத்தின்போது அதிக அளவில் மீண்டு வந்தோர் எண்ணிக்கையில் மலேசியாதான் முதலிடத்தில் உள்ளது. அங்கு 79 சதவீதமாக அது இருந்தது. அடுத்த இடத்தில் ஈரானும், பஹ்ரைனும் உள்ளன. சீனா 4வது இடத்தில் உள்ளது. தற்போதைய சூழலில் டெல்லி, தமிழ்நாடு, குஜராத், திரிபுரா ஆகியவை ஏற்கனவே உச்சத்தை எட்டி விட்டதாக கருதப்படுகிறது. அதேசமயம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்னும் உச்ச நிலை ஏற்படவில்லை. அங்கு சோதனை அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது. இந்தியாவின் 27 மாநிலங்களில் 22 மாநிலங்களில் இன்னும் உச்சநிலை ஏற்படவில்லை.
இரட்டிப்பாகும்
இந்தியாவைப் பொறுத்தவரையில் நோயாளிகள் இரட்டிப்பாகும் எண்ணிக்கை 22 நாட்களாக குறைந்துள்ளது. இது முன்பு 65 நாட்களாக இருந்தது. தற்போது அது அடியோடு குறைந்துள்ளது. அமெரிக்கா, அர்ஜென்டினா போன்ற நாடுகளிலும் இதே அளவிலேயே உள்ளது. உலக அளவில் இரட்டிப்பாகும் கால சராசரி 43 நாட்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா உச்சத்தை நெருங்கி வருவதையே இது காட்டுகிறது.
வங்கதேசம்
ஆசிய அளவில் அதிகம் பேர் பலியாகும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மே 31ம் தேதி 10 லட்சம் பேருக்கு நான்கு பேராக இது இருந்தது. ஆனால் தற்போது இது 35 ஆக அதிகரித்துள்ளது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானும், 3வது இடத்தில் வங்கதேசமும் உள்ளன. இந்தியாவில் முன்பு நகரங்கள்தான் அதிக பாதிப்பை சந்தித்து வந்தன. தற்போது இது கிராமங்களாக மாறியுள்ளது. கிராமங்களிலும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
சர்வே
இந்தியாவில் தினசரி ஏற்படும் பாதிப்புகளில் பாதிக்கும் மேலான அதாவது 54 சதவீத அளவிலான பாதிப்பு கிராமங்களில்தான் பதிவாகி வருகின்றன. ஆந்திராதான் இதில் அதிக பாதிப்புக்குள்ளான மாநிலமாகும். இங்கு 11 கிராமப்புற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்த இடத்தில் 6 மாவட்டங்களுடன் மகாராஷ்டிரா உள்ளது என்று அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.