இலங்கையின் ஜனநாயகம், அரசியல் நிலைத்தன்மைக்கு ஆதரவு- மத்திய அரசு; வன்முறைக்கு ஐ.நா. கடும் கண்டனம்!
டெல்லி: இலங்கையின் ஜனநாயகம், அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார மீட்புக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மக்களின் அமைதிப் போராட்டத்துக்கு எதிராக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வன்முறையைத் தூண்டினார். இதனால் இலங்கை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தற்போது பதவி விலகி உள்ள மகிந்த ராஜபக்சே, திருகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சமடைந்துள்ளதாகவும் கூறப்ப்படுகிறது.
இலங்கை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கோட்பாட்டை தொடர்ந்து கடைபிடிக்கிறோம். இலங்கையின் ஜனநாயகம், நிலைத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்; பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு 3.5 பில்லியன் டாலர் நிதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இலங்கை வன்முறை: கோத்தபாய, மகிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பி ஓட திட்டம்? தயார் நிலையில் 5 விமானங்கள்?
இதனிடையே கொழும்பு காலிமுகத் திடலில் மகிந்த ராஜபக்சே ஏவிய குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் Michelle Bachele கூறுகையில், கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் கண்டனத்துக்குரியவை. அனைத்து வகையான வன்முறைகளையும் நாங்கள் கண்டிக்கின்றோம். அனைத்து தாக்குதல்கள் குறித்தும் விரிவான மற்றும் வெளிப்படையான விசாரணையை தொடங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துகின்றோம் என கூறியுள்ளார்.