பீரங்கியை தாங்கும் "வலிமை”.. சீனாவுக்கு “பொறி”! 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்திய ராணுவம்
டெல்லி: லடாக் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் சீனாவை தடுக்க இந்திய எல்லைக்கோட்டு பகுதியில் சக்திவாய்ந்த நிரந்தர 3டி தடுப்புகளை உருவாக்க இந்திய ராணுவம் முடிவு செய்து இருக்கிறது.
இந்தியாவுக்கு உட்பட்ட அருணாச்சல பிரதேச மாநில எல்லை பகுதியை சீனா ஆக்கிரமித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புகள், சாலைகளை கட்டியது. இந்த புகைப்படங்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக லடாக்கின் கைலாஷ் பகுதியில் சீனாவின் ஊடுருவலை இந்திய பாதுகாப்பு படைகள் தடுக்க முயன்றபோது மோதல் ஏற்பட்டது.

இந்தியா - சீனா மோதல்
இரு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருநாட்டு படைகள் மெல்ல விலக்கிக்கொள்ளப்பட்டன. இதனை பயன்படுத்தி சீனா இந்திய எல்லை பகுதிகளில் கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் லடாக்கில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பேன்காங் சோ பகுதியில் சீனா வேகமாக நகரத்தை உருவாக்கி வருகிறது.

லடாக்கில் சீன நகரம்
ஹாட் ஸ்ப்ரிங் அருகே பேன்காங் ஏரியின் தெற்கு பகுதியை இணைக்கும் வகையில் சாலைகள் சீனாவால் அமைக்கப்பட்டு உள்ளன. சீனாவின் எல்லைக்கு உட்பட்ட ருடோக் பகுதியில் குவிக்கப்பட்டு இருக்கும் அந்நாட்டு படைகளின் முகாமுக்கு அருகே இப்பகுதி இருக்கிறது.

3டி தடுப்பு
இந்த நிலையில் சீன ஊடுருவலை தடுக்க புதிய திட்டங்களை இந்திய பாதுகாப்புத்துறை தீட்டி வருகிறது. அதன்படி இந்தியா சீனா எல்லைப்பகுதியில் நிரந்தர 3டி தடுப்புகளை அமைக்க இந்திய ராணுவம் முடிவு செய்து இருக்கிறது. சக்திவாய்ந்த இந்த தடுப்புகள் டி-90 எனப்படும் டாங்கியின் தாக்குதலை 100 மீட்டருக்கு குறைவான தொலைவில் இருந்து தாங்கும் திறன் கொண்டது.

நவீன தங்குமிடம்
அதேபோல் நிரந்தர பாதுகாப்பிற்காக நிலையான வலுவான பதுங்கு குழிகள், கண்காணிப்பு கம்பங்கள், வெடிமருந்து கிடங்குகளையும் அத்துடன் அமைக்க இந்திய ராணுவம் திட்டமிட்டு உள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 22,000 துருப்புகள் பயன்படுத்தும் வகையில் நவீன தங்குமிடம் அமைக்கப்பட்டு உள்ளது.

சேமிப்பு கிடங்கும்
அதேபோல் ராட்சத ஆயுத சேமிப்பு கிடங்கும் கட்டப்பட்டு இருக்கிறது. இதில் 450 டாங்குகள், கவச ஆயுதங்கள், துப்பாக்கிகளை சேமித்து வைக்க முடியும். ஆனால், இவையெல்லாம் நகரக்கூடியவையாக உள்னன. எனவே தற்போது நிரந்தர தடுப்புகள், வாழ்விடங்களை அமைக்க ராணுவம் திட்டம் தீட்டி வருகிறது.

சோதனை முயற்சி
பல்வேறு சோதனை முயற்சிகளுக்கு பிறகே இந்த 3டி தடுப்புகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும், இவை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் ஐஐடி காந்திநகர் முன்னாள் மாணவர்களால் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டம் கிழக்கு லடாக் மட்டுமின்றி முழு லடாகிற்கும் கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.

7 லட்சம் கண்ணிவெடி
குளிர்காலத்துக்கு பின்னர் அடுத்த ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும், இந்த தடுப்பின் ஒவ்வொரு பகுதியும் 40 கிலோ எடை கொண்டவை என்றும், 2 அல்லது 3 படைவீரர்களால் இதை எளிதில் நகர்த்த முடியும் எனவும் கூறுகிறார்கள். மேலும் எதிர்நாட்டு வீரர்கள், டாங்கிகளை வீழ்த்த 7 லட்சம் கண்ணிவெடிகளை புதைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications