நெருக்கடி நிலையை 'பாட்டி' இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறுதான்... ராகுல் காந்தி ஒப்புதல்
டெல்லி: இந்தியாவில் நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது நிச்சயம் தவறுதான் என்று அவரது பேரனும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரும் Cornel பல்கலைக் கழக பேராசியருமான கெளசிக் பாசு மற்றும் மாணவர்களுடனான உரையாடலில் நெருக்கடி நிலை தொடர்பான கேள்விக்கு ராகுல் அளித்த பதில்:
நெருக்கடி நிலை தப்புதான்
நெருக்கடி நிலையை என்னுடைய பாட்டி இந்திரா காந்தி அமல்படுத்தியது பிழையானது. தவறானது. நிச்சயம் தவறுதான். அதேநேரத்தில் நெருக்கடி நிலை காலத்துக்கும் தற்போது நடந்து வரும் நிகழ்வுகளுக்கும் அடிப்படையில் வேறுபாடுகள் உள்ளன.
காங். கைப்பற்றவில்லை
நெருக்கடி நிலை அமலில் இருந்த போதும் ஜனநாயக அமைப்புகளை காங்கிரஸ் ஒருபோதும் கைப்பற்ற முயற்சிக்கவில்லை. ஆனால் தற்போது இந்த ஜனநாயக அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல்
தேர்தல்களில் நாங்கள் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்திவிடலாம்.. ஆனால் நாட்டின் ஜனநாயக அமைப்புகளில் இருந்து ஆர்.எஸ்.எஸ். நபர்களை ஒருபோதும் வெளியேற்ற முடியாது என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்திரா காலத்து நெருக்கடி நிலைக்கும் தற்போதைய நிலைக்குமான வேறுபாடு.
|
ஜனநாயக அமைப்புகள் சீர்குலைவு
ஜனநாயக அமைப்புகள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். ஆனால் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் இந்த அமைப்புகளை சீர்குலைத்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. இதை படிப்படியாக செய்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.