வெறும் 9 கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு 50% வேக்சின்கள்.. அனைவருக்கும் தடுப்பூசி வாய் வார்த்தை தானா?
டெல்லி: கடந்த மே மாதம் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்பட்டதில் வெறும் 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள் மட்டும் சுமார் 50% தடுப்பூசிகள், அதாவது 60.57 தடுப்பூசிகளை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சிறு மருத்துவமனைகள் போதிய தடுப்பூசிகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் தற்போது 18+ அனைவருக்கும் தடுப்பூசிகளைச் செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 14 வரை அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக், சலூன்கள், தேநீர் கடைகள் திறக்க அனுமதி இல்லை
ஆனால், நாட்டிலுள்ள வெறும் சில தனியார் மருத்துவமனைகளே அதிகளவில் கொரோனா தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதும் தெரிய வந்துள்ளது.
மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை
மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கையின்படி, உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 50% தடுப்பூசியை மத்திய அரசிற்கு விற்க வேண்டும். மீதமிருக்கும் 50% தடுப்பூசியை மாநில அரசுகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் விற்பனை செய்து கொள்ளலாம். அதன்படி மத்திய அரசு 50.9% (4.03 கோடி டோஸ்கள்), மாநில அரசு 33.5% (2.66 கோடி டோஸ்கள்) கொள்முதல் செய்துள்ளன. தனியார் மருத்துவமனைகள் மொத்தம் 1.20 கோடி டோஸ்களை (15.6%) வாங்கியுள்ளன.
9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
கடந்த மே மாதம் நாட்டில் உள்ள வெறும் 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள் மட்டும் 60.57 லட்சம் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்துள்ளன. இது ஒட்டுமொத்தமாகத் தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்த கொரோனா தடுப்பூசிகளில் 50% ஆகும். அதாவது, கடந்த மாதம் மொத்தமாக 1.20 கோடி தடுப்பூசி டோஸ்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதில் 60.57 லட்சம் டோஸ்கள் வெறும் 9 மருத்துவமனைகள் மட்டும் வாங்கியுள்ளன.
எந்தெந்த மருத்துவமனைகள்
தனியார் மருத்துவமனை நிறுவனங்களைப் பொறுத்தவரை அப்பல்லோ மருத்துவமனைகள் (16.1 லட்சம் டோஸ்கள்); மேக்ஸ் ஹெல்த்கேர் (12.97 லட்சம் டோஸ்கள்); ரிலையன்ஸ் அறக்கட்டளையின் எச்.என் மருத்துவமனை (9.89 டோஸ்கள்); மெடிகா மருத்துவமனைகள் (6.26 லட்சம் டோஸ்கள்; ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் (4.48 லட்சம் டோஸ்கள்); கோத்ரேஜ் (3.35 லட்சம் டோஸ்கள்); மணிப்பால் ஹெல்த் (3.24 லட்சம் டோஸ்கள்); நாராயண ஹிருதலயா (2.02 லட்சம் டோஸ்கள்), டெக்னோ இந்தியா டமா (2 லட்சம் டோஸ்கள்) கொள்முதல் செய்துள்ளன.
விலை எவ்வளவு
சீரம் மற்றும் பாரத் பயோடெக் மருத்துவமனைகள் மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு தடுப்பூசிகளை விற்பனை செய்கின்றன. அதேநேரம் தனியார் மருத்துவமனைகளுக்கு கோவிஷீல்டு 600 ரூபாய்க்கும், கோவாக்சின் 1200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல தனியார் மருத்துவமனைகள் சார்பில், பொதுமக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி 850 முதல் 1000 ரூபாய்க்கும், கோவாக்சின் 1250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நகரங்களில் மட்டும்
நாட்டிலுள்ள வெறும் 9 மருத்துவமனைகள் அதிகளவில் கிட்தட்ட 50% தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்துள்ளன. இதில் சிக்கல் என்னவென்றால் அவை அனைத்தும் நகர்ப்புறங்களில் மட்டுமே மருத்துவமனைகளைக் கொண்டுள்ளன. இந்த தனியார் மருத்துவமனை நிறுவனங்கள் டையர் 1 மற்றும் டையர் 2 நகரங்களிலேயே மருத்துவமனைகளைக் கொண்டுள்ளன. இதனால் கிராமப்புறங்களுக்குப் போதியளவில் தடுப்பூசிகள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சிறு மருத்துவமனைகள்
அதேபோல அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் விரும்பியளவு தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. சிறு மருத்துவமனைகளுக்குக் குறைந்தளவே தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன. மும்பை இந்து சபா மருத்துவமனையின் மருத்துவமனை 30 ஆயிரம் தடுப்பூசிகளை ஆர்டர் செய்ததாகவும் ஆனால் வெறும் 3 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே கிடைத்ததாகவும் அந்த மருத்துவமனை இயக்குநர் டாக்டர் வைபவ் தியோர்கிர்கர் தெரிவித்தார்.
பிரச்சினைகள்
இது தனியார் மருத்துவமனைகளிலும் மிகப் பெரிய ஒரு ஏற்றத்தாழ்வை உருவாக்கியுள்ளது. அதாவது மிகப் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளால் தங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை எளிதாகப் பெற முடிகிறது. ஆனால், சிறிய மருத்துவமனைகளால் அப்படிப் பெற முடிவதில்லை. அதேபோல, தனியார் மருத்துவமனைகளுக்கு டையர் 2 நகரங்களைத் தாண்டி மருத்துவமனைகள் இல்லை என்பதால் டையர் 3 நகரங்கள். கிராமப்புறங்களில் தடுப்பூசிகள் போதியளவில் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.