ராகுல் காந்தி வீட்டில் சித்தராமையா, டிகே சிவகுமார்.. அவசர ஆலோசனை.. கர்நாடக அரசியலில் என்ன நடக்கிறது?
டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இல்லத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் சிவகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.
கர்நாடகாவில் தற்போது எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு எதிர் கட்சி தலைவராக இருப்பவர் சித்தராமையா . அவருக்கும் டிகே சிவகுமார் இடையே அதிகாரத்துக்கான போட்டி இருந்து வருகிறது .
மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பு.. 12 அமைச்சர்கள் ராஜினாமா! புதிதாக 43 அமைச்சர்கள் பதவியேற்பு
அடுத்த சட்டசபை தேர்தலின் போது, யாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்பதில் இரு தரப்பு ஆதரவாளர்களும் பிடிவாதமாக இருக்கிறார்கள் .
முதல்வராக இருந்த சித்தராமையா
தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து சுமார் 15 வருடங்களுக்கு முன்பாக பிரிந்து வந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர் சித்தராமையா. ஆனால் ஐந்து வருடங்களில் அவர் முதல்வராக இருக்கும் வாய்ப்பை காங்கிரஸ் தந்துள்ளது. டிகே சிவகுமார் ஆரம்பம் முதல் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவராக இருந்து வருகிறார். எனவே அவருக்கு முதல்வர் பதவி தருவதுதான் பொருத்தமாக இருக்கும் என்பது அவர் ஆதரவாளர்கள் வாதமாக இருந்து வருகிறது.
டிகே சிவகுமாரின் கட்சி விசுவாசம்
கர்நாடகாவில் பாஜகவினர் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும்போது அதற்கு சித்தராமையாவை விடவும் டி கே சிவகுமார் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்தார். கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருந்து வருகிறார். எனவே அவருக்கு முதல்வர் பதவி தருவது பொருத்தமாக இருக்கும் என்று சிவகுமார் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.
சித்தராமையாவின் மக்கள் செல்வாக்கு
அதே நேரத்தில் சித்தராமையாவுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை மறுப்பதற்கு இல்லை. டிகே சிவகுமாருக்கு தெற்கு கர்நாடகா பகுதிகளில் ஆதரவு அதிகளவு இருந்த போதிலும்கூட, சித்தராமையாவுக்கு மாநிலம் தழுவிய அளவில் பரந்து விரிந்த மக்கள் செல்வாக்கு இருக்கிறது. யாதவர் இனத்தின் ஒரு ஜாதி பிரிவான குருபர் இனத்தைச் சேர்ந்தவர் சித்தராமையா. இது லிங்காயத்து மற்றும் ஒக்கலிகர் பிரிவை ஒப்பிட்டால் மிகப்பெரிய வாக்கு வங்கி இல்லாத ஜாதி பிரிவுதான். ஆனால், கணிசமான வாக்கு வங்கி இருப்பதை மறுக்க முடியாது. இது தவிர, அனைத்து ஜாதி மக்களிடமும் உள்ள ஆதரவுதான் சித்தராமையா பலம். ஒருபக்கம் டிகே சிவகுமாருக்கு பணபலம் மற்றும் ஒக்கலிகர் ஜாதி ஆதரவு இருக்கிறது , சித்தராமையாவுக்கு மாநிலம் தழுவிய அளவில் மக்கள் செல்வாக்கு மற்றும் கூடுதல் நிர்வாக திறமை இருக்கிறது. ஊழல் இல்லாதவர் என்ற இமேஜ் உள்ளது. இதனால்தான் யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் மேலிடம் நீண்ட குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
ராகுல் காந்தி வீட்டில் ஆலசோனை
இந்த நிலையில் இன்று மாலை ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சித்தராமையா, சிவகுமார் ஆகியோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் சில மாநிலங்களில் இருந்து முக்கிய தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜகவுக்கு எதிரான வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, கர்நாடகாவில் எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கி வேறு ஒருவருக்கு அந்த பதவியை தர பாஜக தயாராகியுள்ள நிலையில், இதிலிருந்து காங்கிரஸ் எப்படி அரசியல் லாபம் பெற முடியும் என ஆலோசிக்கப்பட்டது.
டிகே சிவகுமாருடன் விரிசல் இல்லை
முன்னதாக, இன்று மதியம் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சித்தராமையா, எனக்கும் டிகே சிவகுமார் இடையே விரிசல் இருப்பதாக கூறப்படுவது உண்மை கிடையாது. நாங்கள் இருவரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். கட்சியை இணைந்து வலுவாக்கி வருகிறோம். கர்நாடக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் கிடையாது . கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் கட்சி அரியணை ஏறும். பாஜக அரசின் ஊழல்களுக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.