காஷ்மீரில் வேட்டையை தொடங்கியது ராணுவம்.. 2 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற என்கவுண்டரில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
குளிர்காலம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீருக்குள் ஏராளமான தீவிரவாதிகள் ஊடுருவ தொடங்கியிருப்பதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. ஏற்கனவே காஷ்மீருக்குள் சுமார் 15 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதிகள் ஊடுருவி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இவர்கள் அனைவருமே பாகிஸ்தானில் பயிற்சி பெற்று, அதிநவீன ஆயுதங்களுடன் காஷ்மீருக்குள் ஊடுருவி இருந்தனர்.
இந்த நிலையில், அமர்நாத் யாத்திரை நடைபெறும் பாதையில் கண்ணிவெடிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், தூரத்திலிருந்து குறி பார்த்து சுட கூடிய நவீன வகை துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் ராணுவத்தின் தரப்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.
அமர்நாத் பக்தர்களை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், நேற்று மதியம் முதல் அமர்நாத் யாத்திரை திடீரென ரத்து செய்யப்பட்டது. காஷ்மீரில் நடைபெறவிருந்த துர்கா தேவி விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் முதல்கட்டமாக 10 ஆயிரம் துணை ராணுவ படையினரும், இரண்டாவது கட்டமாக 28000 துணை ராணுவப் படையினரும் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில் காஷ்மீர் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். இது தீவிரவாத ஒழிப்புக்காக எடுக்கப்படும் நடவடிக்கை, என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் விளக்கம் அளித்திருந்தார்.
இன்று, தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினர் தீவிர நடவடிக்கைகளை துவங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சோபியான் மற்றும் பாராமுல்லா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து நவீன வகை ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே போதிய விமான வசதி இல்லாமல் காஷ்மீரில் தவித்து வரும் அமர்நாத் யாத்ரீகர்கள் வசதிக்காக, சிறப்பு விமானம் மூலமாக அவர்களை பதன்கோட் மற்றும் டெல்லி நகரங்களுக்கு அழைத்து வர விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications