மணிஷ் சிசோடியாவை சிபிஐயிடம் போட்டுக்கொடுத்ததே அரவிந்த் கெஜ்ரிவால்தான்! குட்டையை குழப்பும் பாஜக
டெல்லி: டெல்லியின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ தொடர் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
Recommended Video
இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சிசோடியா குறித்து சிபிஐயிடம் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் தெரிவித்திருக்கலாம் என பாஜக கூறியுள்ளது.
மதுவிலக்கு மாற்றம் செய்த விவகாரத்தில், கலால் வரியில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் சிசோடியா தொடர்புடைய சுமார் 21 இடங்களில் சிபிஐ சோதனையை மேற்கொண்டு வருகிறது.
குஜராத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. தரமான இலவச கல்வி.. அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி!
பின்னணி
டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார். இந்த புகாரை டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் சில அரசு அதிகாரிகள் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தள்ளுபடி
இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் கடந்த மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன.
சர்ச்சை
அந்த அறிக்கையில், ஜிஎன்சிடிடி சட்டம், தொழில் பரிவர்த்தனை விதி , டெல்லி உற்பத்தி வரி சட்டம் , டெல்லி உற்பத்தி வரி ஆகியன மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதில் மதுபான உரிமங்கள் வழங்குவதற்கு சலுகைகள் காட்டப்பட்டது; அரசுக்கு இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டது; உற்பத்தி வரித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாதான் காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார்.
குற்றச்சாட்டு
இதன் தொடர்ச்சியாக தற்போது சிசோடியா தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த ரெய்டு குறித்து கடும் கண்டனம் தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இது முதல் முறை நடத்தப்படும் ரெய்டு அல்ல என்றும், ஏற்கெனவே இது போன்ற பல ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. தற்போதும் அதேபோலதான் நடக்கும் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
கவுதம் கம்பீர்
இந்நிலையில், "நீங்கள் கோடிக்கணக்கான வரி செலுத்துவோரின் பணத்தை கொள்ளையடித்து, மதுபான மாஃபியாவுடன் அமர்ந்து மதுபான கொள்கையை உருவாக்கியுள்ளீர்கள். உங்களுக்கான இடம் இது அல்ல சிறைச்சாலைதான்" என பாஜக எம்பி கவுதம் கம்பீர் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி குறித்து விமர்சித்துள்ளார். அதேபோல சிசோடியாவுக்கு எதிரான சிபிஐ ரெய்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஆம் ஆத்மியின் விமர்சனத்தையும் கம்பீர் மறுத்துள்ளார்.
பாஜக சந்தேகம்
"அவர்கள் முறைகேடுகள் எதிலும் ஈடுபட்டால் சுத்தமாக இருந்திருந்தால் அவர்களே மதுவிற்பனையை நடத்தி இருக்க வேண்டும். இதிலிருந்து ஏன் அவர்கள் பின்வாங்கினார்கள்? ஏனெனில் அவர்கள் மாட்டிக்கொள்வார்கள் என ஏற்கெனவே அறிந்திருக்கிறார்கள்" என்று கம்பீர் கூறியுள்ளார். அதேபோல இந்த ரெய்டு விவகாரத்தை பொறுத்த அளவில் கெஜ்ரிவால் சிபிஐயிடம் சிசோடியா குறித்து தகவல் தெரிவித்திருக்கலாம் என பாஜக கூறியுள்ளது.