எதிர்க்கட்சிகளின் அமளி- ராஜ்யசபா, லோக்சபாவில் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றம்!
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா விவாதங்கள் இல்லாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இக்கூட்டத் தொடர் தொடங்கிய உடனேயே லோக்சபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.
சில எம்.பி.க்கள் சபை நடுவே நின்று கொண்டு முழக்கங்களை எழுப்பினர். வேளாண் விளைபொருட்களுக்கு ஆதார விலையை நிர்ணயித்து சட்டம் நிறைவேற்ற வேண்டும், விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
லோக்சபாவில் அமளி
மேலும் சில எம்.பிக்கள், உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். ஆகையால் அஜஸ் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பி பதாகைகளை தூக்கிப் பிடித்தனர். இந்த அமளியைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
திரும்பப் பெறும் மசோதா நிறைவேற்றம்
இதன்பின்னர் சபை கூடிய போது மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், 3 விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்தார். இம்மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஆனால் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன. பிற்பகல் 2 மணிக்கு சபை கூடிய போதும் அமளி நீடித்ததால் இன்று நாள் முழுவதும் சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
திமுக எம்.பிக்கள் பதவியேற்பு
ராஜ்யசபாவில் இன்று திமுகவின் புதிய எம்.பிக்களான ராஜேஷ் குமார், அப்துல்லா, கனிமொழி சோமு ஆகியோர் பதவியேற்றனர். மூன்று பேரும் தமிழில் பதவியேற்றனர். ராஜேஷ்குமார் எம்.பி. பதவி ஏற்று முடிக்கும் போது, வெல்க தளபதி, வெல்க அண்ணன் உதயநிதி என முழக்கங்கள் எழுப்பினார். இந்த முழக்கங்கள் சபை குறிப்பில் இடம்பெறாது என ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு கூறினார். இதனைத் தொடர்ந்து மறைந்த எம்.பிக்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் குறிப்புகளை ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு வாசித்தார். பின் மறைந்த எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சபை நடவடிக்கைகள் 1 மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் சபை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்றன. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டதால் ராஜ்யசபா நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
திரும்பப் பெறும் மசோதா நிறைவேற்றம்
பிற்பகல் 2 மணிக்கு ராஜ்யசபா கூடிய போது, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திரும்பப் பெறும் மசோதாக்கள் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார். இம்மசோதா ராஜ்யசபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றபட்டதாக ராஜ்யசபா துணைத் தலைவர் அறிவித்தார். அப்போதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளி நீடித்ததால் சபை நடவடிக்கைகள் சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டன.