சுகேஷ் சந்திரசேகர் பாஜகவில் சேரப்போறார்.. “தலைவர் ஆக்கலாம்.. கூட்டமாவது வரும்” - கெஜ்ரிவால் கிண்டல்!
டெல்லி : சுகேஷ் சந்திரசேகர் எப்போது வேண்டுமானாலும் பாஜகவில் சேருவார், அவரையே பாஜக தேசிய தலைவராக்கலாம் என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தான் ஆம் ஆத்மி அமைச்சருக்கு 10 கோடி கொடுத்ததாகவும், ஆம் ஆத்மியில் முக்கிய பதவி பெறவும், எம்.பி சீட் பெறவும் கட்சிக்கு ரூ.50 கோடி நன்கொடை கொடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.
பாஜக, ஆம் ஆத்மி குஜராத்தில் ஆட்சியைப் பிடித்துவிடும் என்ற பயத்தில் சுகேஷ் சந்திரசேகரை வைத்து பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகர் எந்தநேரமும் பாஜகவில் இணையலாம் என்று தெரிவித்தார். பாஜக, சுகேஷ் சந்திரசேகரை நட்சத்திர பேச்சாளராக ஆக்கினால் அவரது கதையை கேட்கவாவது மக்கள் கூட்டங்களுக்கு வருவார்கள் என விமர்சித்துள்ளார்.

சுகேஷ் சந்திரசேகர்
இரட்டை இலை சின்னம் பெற்றுத் தர லஞ்சம் பெற்ற வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டவரும், பிரபல மோசடி மன்னனுமான சுகேஷ் சந்திரசேகர், "ஆத் ஆத்மி கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தனக்கு எம்.பி சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.50 கோடி பெற்றார். சிறையில் பாதுகாப்பு வேண்டுமானால் மாதம் 2 கோடி தரவேண்டும் என சத்யேந்திர ஜெயின் கூறினார். அதன்படி அவருக்கு 10 கோடி வழங்கினேன்" என்று டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பாஜக vs ஆம் ஆத்மி
சுகேஷ் சந்திரசேகரின் குற்றச்சாடை முன்வைத்து ஆம் ஆத்மி அரசுக்கு பாஜக கடும் குடைச்சல் கொடுத்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் கொடுத்ததாக சுகேஷ் சந்திரசேகர் கூறியது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. குஜராத்தில் தேர்தல் வரவுள்ளதால் பாஜக மோர்பி பால பிரச்சனையைத் திசை திருப்ப இப்படிச் செய்கிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

பாஜகவுக்கு இதான் வேலை
பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு, அவர்கள் குமார் விஸ்வாசை அழைத்து வந்து, கெஜ்ரிவாலுக்கு சமூக விரோத சக்திகளுடன் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டினார்கள். இப்போது, அதே தந்திரத்தை மீண்டும் கையாள சுகேஷ் சந்திரசேகர் போன்ற சிறையில் அடைக்கப்பட்டவர்களின் உதவியை நாடியுள்ளார்கள். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக யாரையும் எதையும் சொல்ல வைக்கும் என ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

பாஜகவில் சேரப்போகிறார்
இந்நிலையில் இதுதொடர்பாக பேசியுள்ள அரவிந்த் கேஜ்ரிவால், "சுகேஷ் சந்திரசேகர் பாஜகவின் மொழியைப் பேசக் கற்றுக் கொண்டிருக்கிறார். அவர் தற்போது பாஜகவில் சேர பயிற்சி பெற்று வருகிறார். அவர் எந்த நாளிலும் பாஜகவில் இணைவார். சுகேஷ் சந்திரசேகரை பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளராக ஆக்க வேண்டும். குறைந்தபட்சம் அவரது கதைகளைக் கேட்கவாவது மக்கள் பாஜக கூட்டங்களுக்கு வருவார்கள்.

அவரையே பாஜக தலைவராக்கலாம்
மோடி பங்கேற்கும் பேரணிகளில் கூட்டமே கூடுவதில்லை என்று நான் கேள்விப்பட்டேன். சுகேஷ் சந்திரசேகரை பேச வைத்தாலாவது பாஜக கூட்டங்களின் போது மக்கள் கூட்டம் இருக்கும். எனவே, அவர்கள் சுகேஷை கட்சியில் சேர்த்து அவரை தேசிய தலைவராக்க வேண்டும்" என அரவிந்த் கெஜ்ரிவால் கிண்டலாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications