கேரளாவில் 3 ஆம் அலை? எல்லையில் தீவிர கண்காணிப்பு தேவை.. தமிழக & கர்நாடக அரசுக்கு மத்திய அரசு வார்னிங்
டெல்லி: கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள கொரோனா பரவல் நிலை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா. எல்லையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வலியுறுத்திய அவர், வேக்சின் பணிகளையும் வேகப்படுத்துமாறு வலியுறுத்தினார்.
கொரோனா பாதிப்பை இன்னும் எந்த மாநிலமும் முழுமையாக ஒழித்துவிடவில்லை. சில மாதங்கள் வரை கொரோனா குறைந்தாலும்கூட, மீண்டும் அவை அதிகரிக்கத் தொடங்குவதால் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவால் நிறைந்த ஒன்றாக உள்ளது.
கேரளாவிலும் இப்போது இதேதான் நடக்கிறது. முதல் இரண்டு அலையைக் கேரளா அரசு சிறப்பாகக் கையாண்டிருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக அங்கு வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா
முதலில் பக்ரீத் பண்டிகை சமயத்தில் அம்மாநில அரசு தளர்வுகளை அறிவித்திருந்தது. அப்போது வைரஸ் பாதிப்பு உயரத் தொடங்கியது குறிப்பாக ஓணம் பண்டிகைக்குப் பிறகு கேரளாவில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஓணம் பண்டிகையின்போது கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் கூட, மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் கடைகளில் கூடுவதைக் காண முடிந்தது. ஓணம் பண்டிகைக்குப் பின்னரே, அங்கு வைரஸ் பாதிப்பு மளமளவென அதிகரிக்கத் தொடங்கியது.

3ஆம் அலையின் தொடக்கம்?
குறிப்பாக, கடந்த 2 நாட்களாகவே கேரளாவில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. புதன்கிழமை மட்டும் கேரளாவில் 32803 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 173 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு தற்போது 229,912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் மட்டும் வைரஸ் பாதிப்பு உயர்வது அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது 3ஆவது அலையில் தொடக்கமாக இருக்குமோ என்றும் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

மன்சுக் மாண்ட்வியா ஆய்வு
இந்தச் சூழலில் கேரளாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ள தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு நிலை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா நேற்று மாலை ஆய்வு செய்தார். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கேரள எல்லையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு & கர்நாடக அரசுகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

வேக்சின் பணிகள்
இது தொடர்பாக இரு மாநில மருத்துவத் துறை அமைச்சர்களிடமும் மன்சுக் மாண்ட்வியா பேசியதாகவும் சுகாதாரத் துறை செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது எல்லையோரம் அமைந்துள்ள பகுதிகளில் வேக்சின் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்றும் மன்சுக் மாண்ட்வியா வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே, கேரளாவிலிருந்து வருவோருக்குத் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக அரசு
கேரளாவிலிருந்து கர்நாடகா செல்லும் மக்கள் ஒரு வாரம் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும். அவர்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும், கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும் கட்டாயம் ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு அவர்களுக்கு RT PCR சோதனை செய்யப்படும். அதில் கொரோனா இல்லை என உறுதியானால் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு அரசு
அதேபோல எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ள தமிழ்நாடு அரசு, கொரோனா வேக்சின் 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் மற்றும் RT-PCR நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரளாவிலிருந்து வருவோரை அனுமதிக்கின்றனர். இந்த சான்றிதழ்கள் இல்லாத நபர்கள் எல்லையிலேயே திரும்பி அனுப்பப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications