மெகபூபாவின் முதல் தேர்தல்.. ராணுவத்தின் உதவியை நாடிய தந்தை சயீத்- தேவகவுடா சுயசரிதையில் ஷாக் தகவல்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முஃப்தி முதல் முறையாக 1996-ல் தேர்தலில் போட்டியிட்ட போது அவரை வெற்றி பெற வைக்க ராணுவத்தின் உதவியை அவரது தந்தையான முன்னாள் உள்துறை அமைச்சர் முஃப்தி முகமது சயீத் நாடியதாக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் சுயசரிதை புத்தகத்தில் அதிர்ச்சி தகவல் இடம்பெற்றுள்ளது.
"Furrows in a Field: The Unexplored Life of H.D. Deve Gowda" என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் சுகாதா ஶ்ரீனிவாசராஜூ தேவகவுடாவின் சுயசரிதையை எழுதியுள்ளார். இப்புத்தகத்தில் மெகபூபா முஃப்தி, அவர்து தந்தை முஃப்தி முகமது சயீத் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இப்புத்தகத்தை எழுதிய சுகாதா ஶ்ரீனிவாசராஜூவிடம் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி லெப்.ஜெனரல் ஜே.எஸ்.தில்லான் கூறியதாவது: முஃப்தி முகமது சயீத் என்னை சந்திக்க பதாமி பாக் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர் காங்கிரஸில் இருந்தார். அவரது மகள் மெகபூபாவும் அவரது மனைவியும் அனந்தநாக் பகுதியில் போட்டியிடுவதாகவும் அவர்கள் இரண்டு வெற்றி பெற வேண்டும் என விரும்புவதாகவும் கூறினார்.
அதற்கு, வெற்றி தோல்வி பற்றி எனக்கு தெரியாது. என்னைப் பொறுத்தவரையில் அங்கு வாக்குப் பதிவு நடைபெறும். எந்த எண்ணிக்கையில் தீவிரவாதிகள் இருந்தாலும் வாக்குப் பதிவு நடைபெறும். அதற்கு அப்பால், உங்கள் மகளும் மனைவியும் வெல்ல நாங்கள் உதவுவது என்பது நடக்காது என்றேன். இதனை கேட்டு சற்று அதிர்ந்தார் முஃப்தி முகமது சயீத். இவ்வாறு அந்தப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி பிரிண்ட் இணையதளம் லெப்.ஜெனரல் தில்லானிடம் பேசிய போது, இத்தகவலை அவர் உறுதி செய்தார். இதனைத் தவிர முஃப்தி முகமது சய்யீத்துடன் தமக்கு வேறு எந்த நெருக்கமும் இல்லை; அதன்பின்னர் தம்மை அவர் தொடர்பு கொள்ளவும் இல்லை என்றார். அதேநேரத்தில், ஜம்மு காஷ்மீர் அரசியல்வாதிகள் மிகப் பெரும் அச்சுறுத்தல்களுக்கு இடையே செயல்படுவதால் அவர்கள் மீது மிகப் பெரிய மரியாதை உள்ளது" என்றும் லெப்.ஜெனரல் தில்லான் கூறியிருக்கிறார்.