இனி 2 மாத அட்வான்ஸ் போதும்.. வாடகை மாதிரி சட்டம்.. மத்திய அரசு ஒப்புதல்.. முக்கிய அம்சங்கள்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வாடகை சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மாதிரி வாடகை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது இந்த சட்டப்படி வாடகைதாரர்கள், இனி வீட்டின் உரிமையாளர்களுக்கு 2 மாத அட்வான்ஸ் கொடுத்தால் போதும்.
வாடகை மற்றும் குத்தகை முறைகளில் புதிய சட்டங்களை கொண்டு வரவும் அல்லது தற்போதுள்ள வாடகை சட்டங்களில், பொருத்தமான முறையில் திருத்தங்கள் கொண்டு வரவும், மாதிரி வாடகை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டம் நாடு முழுவதும் உள்ள வாடகை வீடுகள் தொடர்பான சட்ட கட்டமைப்பை மாற்றியமைக்க உதவும், இது அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். இந்த சட்டம் ... அனைத்து வருமானக் குழுக்களுக்கும் போதுமான வாடகை வீட்டுவசதிப் பங்கை உருவாக்க உதவும், இதன் மூலம் வீடற்றோர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்" என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊக்குவிக்கும்
காலியாக இருக்கும் வீடுகளை எல்லாம், வாடகைக்கு விட இந்த மாதிரி வாடகை சட்டம் உதவும். வாடகை வீடுகளை, வணிகமாக நடத்துவதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை இந்த சட்டம் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்த நகல் அவசியம்
மாதிரி வாடகை சட்டத்தின் முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம். வாடகைக்கு குடியிருப்போரிடம், வீட்டு உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் வாங்க முடியாது. வாடகை ஒப்பந்த நகலை, மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் அப்லோடு செய்யலாம்.
பதிவு அவசியம்
*பத்திரப் பதிவு அலுவலகத்தில் வாடகை ஒப்பந்தம் பதிவு செய்தால் மட்டுமே நிவாரணம் பெற முடியும் என்று இருந்தது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டாலும் இரு தரப்பும் நீதிமன்றம் செல்ல முடியும். ஆனால், புதிய சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகுதிவாரியாக அமைக்கப்பட்டுள்ள வாடகை ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.
புதிய சட்டத்தில் வழி
குறிப்பபாக ஆன்லைன் அல்லது நேரடியாக வாடகை ஒப்பந்தத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகுதிவாரியாக அமைக்கப்பட்டுள்ள வாடகை ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டால், நிவாரணம் கோரி இரு தரப்பும் நீதிமன்றம் செல்ல முடியாது. அதே சமயம், ஒப்பந்தம் போடாத நிலையில், வீட்டு உரிமையாளர் மட்டும் நீதிமன்றத்தை நாட புதிய சட்டத்தில் வழிவகைகள் உள்ளது.
தனி வாடகை ஆணையம்
வாடகைதாரர் வீட்டை காலி செய்யாவிட்டால் சட்டப்படி வாடகையை அதிகரிக்க உரிமை இனி கிடைக்கும். வாடகை தொடர்பான புகார்களை விசாரிக்க தனி வாடகை ஆணையம் அல்லது வாடகை தீர்ப்பாயம் அமைக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.