மீண்டும் ஏர் இந்தியா போன்ற விபத்து? மும்பை உட்பட 8 இந்திய நகரங்களுக்கு பெரிய ஆபத்து! புது எச்சரிக்கை
டெல்லி: இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக விரிவடைந்து வருகிறது. அதே நேரத்தில், விமான நிலையங்களைச் சுற்றித் திட்டமிடப்படாத நகரமயமாக்கல் அதிகரித்து வருவது ஒரு பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து இந்த ஆபத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இதற்கிடையே சமீபத்திய சர்வதேச ஆய்வு ஒன்று உலகின் நெருக்கடியான விமான நிலையங்களில் இந்தியாவின் 8 முக்கிய விமான நிலையங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத் அகமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. விமானம் கீழே கல்லூரி விடுதியில் மோதியதில் அங்குப் படிக்கும் சிலரும் உயிரிழந்தனர். மேகானிநகரில் உள்ள நியூ லட்சுமிநகர் காலனியில் இருந்து 250 மீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இங்கு 600 வீடுகளில் சுமார் 2000 பேர் வசிக்கின்றனர்.

அச்சத்தில் மக்கள்
இந்த விபத்தால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். விமானம் கொஞ்சம் விலகிச் சென்றிருந்தாலும் தங்கள் குடியிருப்பில் மோதியிருக்கும் என்றும் இதனால் அழிவு இன்னுமே மோசமாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள், இந்த ஆபத்து அகமதாபாத்திற்கு மட்டும் இல்லை பல இந்திய நகரங்களுக்கும் இருக்கிறது.
8 ஏர்போர்ட்கள்
பெல்ஜியத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களான டைஸ் கிரிபா மற்றும் ஃபிரடெரிக் டோப்ருஷ்கேஸ் இணைந்து தயாரித்த ஆய்வின்படி, உலகின் டாப் 50 அதிக நகரமயமாக்கப்பட்ட விமான நிலையங்களில் இந்தியாவின் 8 விமான நிலையங்கள் உள்ளன. மும்பை சர்வதேச விமான நிலையம் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த லிஸ்ட்டில் விபத்திற்குள்ளான அகமதாபாத் விமான நிலையம் 12-வது இடத்தில் உள்ளது. இதுபோல டெல்லி, சூரத் உள்ளிட்ட விமான நிலையங்களும் இந்த லிஸ்டில் இருக்கிறது.
விமானப் பாதுகாப்பு அடிப்படையில் இந்த நகரங்கள் மிகவும் ஆபத்தான இடத்தில் இருப்பதையே இது காட்டுகிறது. விமான நிலையத்தின் 15 கி.மீ சுற்றளவில் பொதுவாகக் குடியிருப்புகள் பெரியளவில் இருக்கக் கூடாது. அப்போது தான் விமானத்தில் எதாவது ஆபத்து என்றாலும் பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால், நமது நாட்டில் பெரும்பாலான நகரங்களில் ஏர்போர்ட்டை சுற்றி மக்கள் தொகை அதிகமாகவே இருக்கிறது. அப்படி 15 கிமீ சுற்றளவில் எவ்வளவு மக்கள் வசிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்த லிஸ்ட் உருவாக்கப்பட்டது.
ஆபத்தும் அதிகம்
மக்கள் தொகை எவ்வளவு அதிகம் இருக்கிறதோ, அவ்வளவு ஆபத்து அதிகம். இது குறித்து நகரத் திட்டமிடல் வல்லுநர்கள் கூறுகையில், "மும்பை, டெல்லி, அகமதாபாத் போன்ற பெரும்பாலான விமான நிலையங்கள் அந்த நகரங்கள் சிறியதாக இருந்தபோது கட்டப்பட்டன. இப்போது நகர விரிவாக்கம் ஏர்போர்ட்டை சுற்றி அதிக மக்கள் வாழும் சூழலை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
இந்த ஆபத்து இருந்தாலும் பழைய விமான நிலையங்களை அகற்றுவது கடினம் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனால், புதிய விமான நிலையங்களை உருவாக்கும்போது, இந்த எச்சரிக்கையை மனதில் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
விபத்தே நடந்திருக்காது
இந்திய விமான நிலைய ஆணையத்தின் முன்னாள் பொது மேலாளர் சுபாஷ் குமார் கூறுகையில், "விமானம் 200 மீட்டருக்குள் விபத்தில் சிக்கியது. விமான நிலையத்தைச் சுற்றி 3 கி.மீ பஃபர் மண்டலம் இருந்திருந்தால், இந்தத் துயரத்தைத் தவிர்த்திருக்கலாம்" என்றார். அதாவது விமானத்தைச் சுற்றிலும் சுமார் 3 கிமீ சுற்றளவுக்கு எந்தவொரு கட்டுமானமும் இல்லாமல் இருப்பதே பஃபர் மண்டலம்.
இந்த பஃபர் மண்டலம் இருந்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது. விமானத்தைத் தரையிறக்கியிருக்கலாம் என்பது அவரது கருத்து. மேலும், குடியிருப்புப் பகுதிகள் ஓடுபாதைக்கு மிக அருகில் இருந்ததால் மீட்புப் பணிகளும் கடினமானதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பரிந்துரைகள் இருக்கு ஓகே
புதிய விமான நிலையங்களுக்கு 6-8 சதுர கி.மீ பஃபர் மண்டலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதல்கள் படி, விமான நிலையத்தைச் சுற்றி 20 கி.மீ சுற்றளவில் மிகக் குறைந்த அளவிலான வளர்ச்சியே இருக்க வேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்பு காலனிகள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் தடை செய்யப்பட வேண்டும். ஆனால், இந்த அறிவுறுத்தல்கள் நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை.
அகமதாபாத் விமான விபத்து ஒரு எச்சரிக்கை மணி. எனவே, வரும் காலங்களில் புதிய ஏர்போர்ட்கள் கட்டும்போது அதைச் சுற்றிலும் பெரிய கட்டிடங்கள், மக்கள் அதிகம் வாழும் பகுதிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அப்போது தான் பெரிய விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.












Click it and Unblock the Notifications