"பிரதமரின் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும்".. டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியதும் சொன்ன கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், "பிரதமர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும்" எனக் கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
15 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருந்து வரும் டெல்லி மாநகராட்சி தற்போது
ஆம் ஆத்மி வசம் சென்றுள்ளது.
என்னதான் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும், தலைநகர் டெல்லியில் பாஜகவின்
பிடி தளர்ந்திருப்பது அக்கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
மிரட்ட வரும் மாண்டஸ்! பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்! எங்கே தெரியுமா?
அசுர பலத்தை நிரூபித்த ஆம் ஆத்மி
டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில்
ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளில் அமோக வெற்றி பெற்று தனது அசுர பலத்தை
நிரூபித்துள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லி மாநகராட்சியை
தங்கள் இரும்புப் பிடியில் வைத்திருந்த பாஜக 104 வார்டுகளை மட்டுமே
கைப்பற்ற முடிந்திருக்கிறது. இதன் மூலம் டெல்லியில் ஆட்சியை மட்டுமல்லாமல்
தனக்கு இருந்த ஒரே பலமான மாநகராட்சியையும் இழக்க வேண்டிய நிலைக்கு பாஜக
தள்ளப்பட்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸோ வெறும் 9
வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.
கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியினர்
டெல்லி மாநகராட்சி தேர்தல் வெற்றியை ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளையும் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ஆம் ஆத்மி சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த தேர்தல் வெற்றியால் ஆம் ஆத்மி கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
"உழைப்புக்கு கிடைத்த வெற்றி"
இந்நிலையில், இந்த தேர்தல் வெற்றி குறித்து அர்விந்த் கேஜ்ரிவாலிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், "டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தாலும் மாநகராட்சி பல ஆண்டுகளாக பாஜகவின் வசமே இருந்தது. இதனால் பல திட்டங்களை செயல்படுத்துவதிலும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதிலும் சில நடைமுறை சிக்கல்கள் இருந்து வந்தன. எனவே டெல்லி மாநகராட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் நாங்கள் வேலை பார்த்தோம். எங்களுக்கு உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகவே இதை பார்க்கிறேன்.
"பிரதமரின் ஆசிர்வாதம் வேண்டும்"
டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்த மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றினாலும், டெல்லியின் வளர்ச்சிக்கு எதிர்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். டெல்லியை மேம்படுத்த மத்திய அரசு உதவ வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதத்தை கோருகிறேன். ஊழலற்ற மாநகராட்சியாக டெல்லி மாநகராட்சியை மாற்றுவோம்" என்றார்.