இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் இல்லை- அரசு விளக்கம்
டெல்லி: இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நிதி ஆயோக் அமைப்பின் சுகாதாரத் துறைக்கான பிரிவு உறுப்பினர் டாக்டர். விகே பால் இன்று செய்தியாளர்களுக்கு இது பற்றி பேட்டி அளிக்கும்போது இந்த தகவலை உறுதி செய்தார்.
மேலும் அவர் கூறுகையில், இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இந்த வைரஸ் காரணமாக மரண விகிதம் அதிகரிப்பதற்கான எந்த டேட்டாவும் கிடையாது.
மேலும், நமது நாட்டிலும், பிற நாடுகளிலும் புழக்கத்தில் உள்ள கொரோனா தடுப்பூசிகளால் இந்த வகை கொரோனாவையும் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். ஏனெனில், இந்த வகை வைரசை தடுப்பூசி கட்டுப்படுத்தாது என்பதற்கான எந்த தரவும் கிடையாது. இவ்வாறு வி.கே. பால் தெரிவித்துள்ளார்.