அரசு தேவைக்காக புது கார் வாங்கணுமா? வாங்கிக்கோங்க.. தடையை உடைத்த நிர்மலா சீதாராமன்.. ஏன் தெரியுமா?
அரசு நிறுவனங்கள், அமைப்புகள், அதிகாரிகளுக்கு புதிய வாகனங்கள் வாங்க இனி அனுமதி வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: அரசு நிறுவனங்கள், அமைப்புகள், அதிகாரிகளுக்கு புதிய வாகனங்கள் வாங்க இனி அனுமதி வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. இந்த பொருளாதார சரிவு இப்போதே ஆட்டோமொபைல் துறையில் எதிரொலித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று விளக்கம் அளித்தார்.
இந்தியாவில் மத்திய அரசின் செலவு மற்றும் மாநில அரசுகளின் செலவுகளை குறைக்கும் பொருட்டு எல்லா வருடமும் புதிய வாகனங்கள் வாங்குவது தடை செய்யப்பட்டு இருந்தது. அதன்படி முதல்வர்கள், செயலாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்பே வாங்கப்பட்டு வந்தது.
மிக மிக அவசர தேவை இருந்தால் மட்டுமே புதிய வாகனம் வாங்கப்பட்டது. இதனால் சில மாநில அரசு அதிகாரிகள் செயலாளர்கள் வாகனங்கள் 10+ வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே மாற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அதை கைவிட மத்திய நிதித்துறை அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள பேட்டியில், இதுவரை அரசு நிறுவனங்கள், அரசு அமைப்புகள் வாகனங்கள் வாங்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த தடை தற்போது நீக்கப்படும்.
அரசு நிறுவனங்கள், அமைப்புகள் புதிய வாகனங்கள் வாங்க அனுமதி வழங்கப்படும். அனைத்து மாநில அரசுகளும் இனி வாகனங்களை வாங்கலாம். இதன் மூலம் வாகன விற்பனை அதிகம் ஆகும். அரசு பயன்படுத்தும் பழைய வாகனங்களை மாற்ற செய்ய முடிவு செய்தாலும் மாற்றம் செய்யலாம்.
வாகன விற்பனையில் ஏற்பட்டு இருக்கும் மந்த நிலை இதன் மூலம் சரி செய்யப்படும். பொருளாதார மந்தம் புதிய விதியால் சரி செய்யப்படும். இந்திய பொருளாதார வளர்ச்சி நிலை குறித்து அடுத்த வாரம் மேலும் சில அறிவிப்புகள் வெளியிடப்படும், என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.