இந்தியாவில் கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வமானதா இல்லையா? அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய விளக்கம்
டெல்லி: கிரிப்டோகரன்சி மீது மத்திய அரசு 30% வரி விதித்துள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன. 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பிப்.1ஆம் தேதி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா! பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்த திமுக வேட்பாளர்!
அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி
இந்தியாவில் கிரிப்டோகரன்சி என்பது பல ஆண்டுகளாகவே சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. இளைஞர்கள் பலரும் இதில் முதலீடு செய்துள்ள நிலையில், இதைக் கண்காணிக்க யாரும் இல்லை என்பதால் இது பாதுகாப்பான முதலீடு தானா என்பதில் தொடர்ந்து கேள்வி நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே கிரிப்டோகரன்சியை மத்திய அரசு தடை செய்ய உள்ளதாகவும் இது தொடர்பான மசோதாவை அரசு விரைவில் கொண்டு வரும் எனத் தகவல் வெளியானது.
வரி
இந்தச் சூழலில் தான் பட்ஜெட் உரையின் போது. கிரிப்டோகரன்சி முதலீடுகளில் இருந்து கிடைக்கும் லாபத்திற்கு 30% வரி விதிக்கப்படும் என அறிவித்தார். நாட்டில் தற்போது உள்ள வரி விகிதங்களில் இது தான் அதிகம் ஆகும். இதற்கிடையே மத்திய அரசு கிரிப்டோகரன்சிகள் மீது வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளதால், இதை அரசு சட்டப்பூர்வமாக அங்கீகரித்துவிட்டது என்றே அர்த்தம் எனச் சிலர் கூற தொடங்கியுள்ளனர். இந்நிலையில், இது குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்ய சபாவில் விளக்கம் அளித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் விளக்கம்
ராஜ்ய சபாவில் இன்று பேசிய நிர்மலா சீதாராமன், "கிரிப்டோகரன்சிகளை தடை செய்யலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து விரிவான ஆலோசனைக்குப் பின்னரே முடிவு எடுக்கப்படும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளின் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வரி விதிக்க அரசுக்கு உரிமை உள்ளது. மேலும் தடை செய்வது தொடர்பான முடிவு ஆலோசனைகளின் அடிப்படையில் எடுக்கப்படும். இந்த நேரத்தில் நான் கிரிப்டோகரன்சிகளை சட்டப்பூர்வமானதாகவும் அறிவிக்கவில்லை. அதைத் தடையும் செய்யவில்லை. பரிவர்த்தனைகளின் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு மட்டுமே நாங்கள் வரி விதித்துள்ளோம்" என்றார்.
அரசின் டிஜிட்டல் கரன்சி
மத்திய அரசு கிரிப்டோகரன்சிகளை அங்கீகரித்துவிட்டதாகச் சிலர் கூறி வரும் நிலையில், இந்த விளக்கம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ரிசர்வ் வங்கியும் கூட பிட்காயின் போன்ற தனியார் கிரிப்டோகரன்சிகள் குறித்துத் தொடர்ந்து கவலை தெரிவித்தே வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் ரிசர்வ் வங்கியே புதிதாக டிஜிட்டல் கரன்சியை வெளியிடும் என நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்திருந்தார்.
முதலீடு
சர்வதேச அளவில் பிட்காயின், எதிரியம், டாஜ்காயின் உள்ளிட்ட பல்வேறு வகையிலான கிரிப்டோகரன்சிகள் உள்ளன. இதுபோன்ற கிரிப்டோகரன்சிகளில் இந்தியாவில் இருந்து குறைந்தது 1.5 கோடி முதல் 2 கோடி பேர் முதலீடு செய்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து மட்டும் கிரிப்டோகரன்சிகளில் சுமார் ₹ 40,000 கோடி ($5.29 பில்லியன்) முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கணிக்கப்படுகிறது.