எம்பி-க்களுக்கு சிவில் வழக்கில் விலக்கு.. குற்ற வழக்கில் கைது செய்யலாம்.. வெங்கையா நாயுடு விளக்கம்!
டெல்லி: நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது குற்ற வழக்குகளில் இருந்து கைது செய்வதில் எம்பி-க்களுக்கு எந்த விலக்கும் இல்லை என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விளக்கமளித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையின் விசாரணை தீவிரமடைந்து வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு முக்கியத் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. அதேபோல் பணமோசடி வழக்கு தொடர்பாக சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

மல்லிகார்ஜுனா கார்கே
இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதுகுறித்து ராஜ்ய சபாவில் கேள்வி எழுப்பிய கார்கே, நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும் போது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நான் சட்டத்தை மதிக்கிறேன். ஆனால் நாடாளுமன்றம் நடைபெறும்போது இப்படி சம்மன் அனுப்புவது சரியான நடைமுறையா என்று கேள்வி எழுப்பினார். இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

வெங்கையா நாயுடு விளக்கம்
இதுகுறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளில் இருந்து விலக்கு இருப்பதாக உறுப்பினர்களிடையே ஒரு தவறான கருத்து இருக்கிறது. அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

சிவில் வழக்கு
நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது சிவில் வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து எம்.பி.க்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. சட்டம் இயற்றுபவர்களாக, சட்டம் மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிப்பது நமது கடமையாகும்.
நாடாளுமன்ற தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, குற்ற வழக்கில் கைதாவதில் இருந்து ஒரு எம்பி-க்கு எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. அந்தவகையில் நாடாளுமன்ற தொடரின்போதும் குற்ற வழக்குகளில் எம்.பி.க்களை விசாரணை அமைப்புகளால் கைது செய்யவோ, தடுப்புக்காவலில் வைக்கவோ முடியும்.

குற்ற வழக்கு
மேலும் குற்ற வழக்கின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில் இருந்தும் உறுப்பினர்களுக்கு விலக்களித்து சிறப்புரிமை அளிக்கப்படவில்லை. நாடாளுமன்ற அலுவல்களை காரணம் காட்டி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில் இருந்து உறுப்பினர்கள் விலக்கு பெற முடியாது. அமலாக்கத்துறை சம்மன் அளிக்கப்பட்டால், மாற்று தேதியை கோரலாம்.












Click it and Unblock the Notifications