அமித்ஷாவை சந்திக்க அவசியமில்லை.. பட்டென சொன்ன டிஆர் பாலு! செய்தியாளர்களுக்கு வைத்த முக்கிய கோரிக்கை!
டெல்லி : குடியரசுத் தலைவரை சந்தித்ததால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினோம் என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். மேலும், செய்தியாளர்களிடமும் ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார் டிஆர் பாலு.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, சில பகுதிகளைத் தவிர்த்தார். மேலும் சில விஷயங்களை தானே சேர்த்து வாசித்தார். இந்த நிகழ்வு பேரவையில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் வாசித்த உரையை அவைக்குறிப்பில் சேர்க்காமல், அச்சடித்து வழங்கப்பட்ட உரையை சேர்க்க தீர்மானம் கொண்டுவந்தார்.
தொடர்ந்து, சட்ட நிபுணர்கள், திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி, ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று முன் தினமே திமுக எம்.பிக்கள் டெல்லி சென்றனர். இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதியுடன் சென்று ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.
ஆளுநர் விவகாரம்: முதல்வர் மனுவை பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க கோரினோம்- திமுக எம்பி டி.ஆர்.பாலு
ஆளுநர் - திமுக மோதல்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையின் சில பகுதிகளை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தார். தமிழ்நாடு, திராவிட மாடல், சமூக நீதி, பல்லுயிர் ஓம்புதல் தொடர்பான பத்தியை ஆளுநர் படிக்கவில்லை. அதேபோல தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராசர், கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும் ஆளுநர் படிக்காமல் தவிர்த்தார். அதேசமயம். ஆளுநர் உரையில் இடம்பெற்றிராத சில கருத்துகளையும் ஆளுநர் பயன்படுத்தினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முக்கியமான மூவ்
இதையடுத்து, விதி 17ஐ தளர்த்தி சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் இந்த செயலுக்கு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதுடன், தமிழ்நாடு அரசு அச்சிட்டு தந்த வாசகங்கள் அல்லாமல் ஆளுநர் தானாக படித்தவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தீர்மானம் கொண்டுவந்தார். இதைத்தொடர்ந்து ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சட்ட நிபுணர்கள், மூத்த வழக்கறிஞர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டது.
சீலிடப்பட்ட கவர்
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, பி.வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை இன்று சந்தித்தனர். முதல்வர் ஸ்டாலின் வழங்கிய சீலிடப்பட்ட கவரை அவர்கள் குடியரசு தலைவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
டிஆர் பாலு
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, "குடியரசுத் தலைவரைச் சந்தித்தோம். தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை சீலிடப்பட்ட கவரோடு அவரிடம் வழங்கினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9-ஆம் தேதி, அவை மரபுகளை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்டது பற்றி எடுத்துரைத்தோம்" எனத் தெரிவித்தார்.
இழிவுபடுத்தும் செயல்
தொடர்ந்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு டி.ஆர்.பாலு பதிலளித்தார். சட்டப்பேரவையின் மரபை மீறி தமிழ்நாடு ஆளுநர் நடந்து கொண்டார். அவருடைய நடவடிக்கைகளை குடியரசுத் தலைவரிடம் எடுத்துக் கூறினோம். ஆளுநரின் செயல் அனைத்து மக்களையும் அவமதிக்கும் செயல். அதுமட்டுமல்லாமல் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னர் ஆளுநர் எழுந்து சென்றார். அந்தச் செயல் ஒட்டுமொத்த தேச மக்களையும் இழிவுபடுத்தும் செயல். இதைத் தான் நாங்கள் குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தோம் எனத் தெரிவித்தார்.
அமித்ஷாவை சந்திக்க அவசியமில்லை
மேலும், முதலமைச்சரின் கடிதத்தில் அன்றைய சம்பவங்கள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அதை வாசித்துவிட்டு குடியரசுத் தலைவர் முடிவெடுப்பார். அவர் என்ன முடிவெடுப்பார் என்பதை நாம் கணிக்க முடியாது. குடியரசு தலைவரை சந்தித்ததால் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்கான அவசியமில்லை. ஆளுநரை நியமிப்பதே உள்துறையும், குடியரசுத் தலைவரும்தான். அதனால் எப்படி நியாயம் கிடைக்கும் என்று நீங்கள் எழுப்பும் ஊகங்கள் அடிப்படையிலான கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல இயலாது எனத் தெரிவித்துள்ளார்.
நெளிவு சுளிவு
அரசியலில் சில நெளிவு சுளிவுகள் உள்ளன. அதன்படி கவனமாகத் தான் எந்த முடிவும் எடுக்கப்பட வேண்டும். குடியரசுத் தலைவரின் முடிவு என்னவாக இருக்கும் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் ஆளுநர் உரையில் இருந்த சில பத்திகளை அவர் தவிர்த்தது, தேசிய கீதத்தை புறக்கணித்தது பற்றி எடுத்துரைத்துள்ளோம். தமிழக ஆளுநர் தொடர்ந்து இவ்வாறு நடக்கிறார் என்றால், அவருக்கு தமிழ்நாட்டில் சனாதன கொள்கையை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என குற்றம்சாட்டினார் டிஆர் பாலு.
நீங்களும் தமிழ்நாடு என்றே
ஆனால் தமிழ்நாடு திராவிட நாடு. பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் உருவாக்கிய தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்திற்கு மாறான கொள்கையை திணிக்க முடியாது என டிஆர் பாலு உறுதிபடத் தெரிவித்துள்ளார். அதோடு, செய்தியாளர்களும் கேள்விகளைக் கேட்கும்போது தமிழ்நாடு என்றே குறிப்பிடுங்கள் என டிஆர் பாலு கேட்டுக்கொண்டுள்ளார்.