நாகாலாந்து படுகொலைகள், கொரோனா மரணங்கள் குறித்து ஜனாதிபதி உரையில் சொல்லவே இல்லையே.. காங். கொந்தளிப்பு
டெல்லி: நாகாலாந்தில் 14 அப்பாவி பொதுமக்களை ராணுவம் சுட்டுப் படுகொலை செய்தது, கொரோனா மரணங்கள் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையில் எதுவும் இடம்பெறவில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். நாடாளுமன்ற இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவதற்கு முன்னதாக திமுக எம்.பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

ஜனாதிபதி உரை
பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கொரோனா தடுப்பூசி இயக்கம் நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக நடைபெறுகிறது. சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை அழிப்பதில் இந்திய தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட்டின் 75% பேருக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசிகளும் முழுமையாக போடப்பட்டுள்ளன என்றார்.

காங். விமர்சனம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறியதாவது: ஜனாதிபதி உரையில் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து எதுவும் இடம்பெறவில்லை. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியா எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து இந்த உரையில் எதுவும் சொல்லப்படவில்லை.

நாகாலாந்து படுகொலைகள்
நாகாலாந்து மாநிலத்தில் 14 அப்பாவி தொழிலாளர்களை ஈவிரக்கமின்றி ராணுவம், பிரிவினைவாதிகள் என சந்தேகித்து படுகொலை செய்தது குறித்தும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையில் இடம்பெறவில்லை. கொரோனா 2-வது அலையில் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தது தொடர்பாகவும் இந்த உரையில் குறிப்பிடவில்லை. இவ்வாறு மணீஷ் திவாரி கூறினார்.

பிரதமர் மோடி
நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அடிக்கடி தேர்தல் நடைபெறுவது நாடாளுமன்ற நடவடிக்கைகளை பாதிக்கிறது. நடப்பு கூட்டத் தொடரை ஆக்கப்பூர்வமானதாக பயன்படுத்தினால்தான் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும். அனைத்து எம்.பி.க்களும் விவாதங்களில் பங்கேற்று தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஒத்துழைக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications