3 ஜாதியினர்தான் குடியரசுத் தலைவருக்கு பாடி-கார்ட் ஆக முடியுமா? டெல்லி ஹைகோர்ட் கேள்வி
இந்திய குடியரசுத் தலைவருக்கு பாதுகாவலர்களை தேர்வு செய்வதில் ஜாதி பாகுபாடு கடைபிடிக்கப்பட்டு வருவதை டெல்லி ஹைகோர்ட் கண்டித்து இருக்கிறது.
டெல்லி: இந்திய குடியரசுத் தலைவருக்கு பாதுகாவலர்களை தேர்வு செய்வதில் ஜாதி பாகுபாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறதா என்று மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்திய குடியரசுத் தலைவருக்கு, தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. ராணுவம் இந்த பாதுகாப்பு படையை சிறப்பு பயிற்சியுடன் தேர்வு செய்து வருகிறது.
இந்த நிலையில் இந்த பாதுகாவலர்களை தேர்வு செய்வதில் ஜாதிய பாகுபாடு பார்க்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பாதுகாவலர் ஆக முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
என்ன நடந்தது
கவுரவ் யாதவ் என்ற ஹரியானவை சேர்ந்த நபர் கடந்த 2014 செப்டம்பர் மாதம், குடியரசுத் தலைவருக்கு பாதுகாவலராக விண்ணப்பம் செய்து இருந்தார். எல்லா விதமான தேர்வுகளிலும் வெற்றிபெற்ற இவர் நேர்முக தேர்விலும் வெற்றிபெற்றார். ஆனால் கடைசியில் இவர் தேர்வு செய்யப்படவில்லை.
என்ன விளக்கம்
இவருக்கு மத்திய அரசு அளித்த விளக்கத்தில், மூன்று ஜாதியினர் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு பாதுகாவலர் ஆக முடியும். ஜாட், ராஜ்புட் , ஜாட் சீக்கியர்கள் ஆகிய மேல் ஜாதியினர் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு பாதுகாவலர் ஆக முடியும். மற்ற ஜாதியினர் இதில் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளது.
வழக்கு தொடுத்தார்
இந்த நிலையில் கவுரவ் யாதவ் டெல்லி ஹைகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடுத்தார். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. சட்ட பிரிவு 14,15,16 ஆகியவற்றிற்கு எதிரான நடைமுறை இது. சாதி, இனம், மொழியையே வைத்து இவர்கள் பாகுபாடு காட்ட கூடாது என்று கூறியுள்ளார்.
கேள்வி எழுப்பினர்
இந்த நிலையில் டெல்லி ஹைகோர்ட் தற்போது இதுகுறித்து மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அதேபோல் குடியரசுத் தலைவர் அலுவலகம், இந்திய ராணுவம், ராணுவ தேர்வாணையம், பாதுகாப்பு துறை ஆகிய அமைப்புகளுக்கு இதில் பதில் அளிக்க வேண்டும் என்றும் சம்மன் அனுப்பி உள்ளது.