எடப்பாடி பேச்சு செல்லாது ‘நான் அதிமுக எம்.பி’ - கடிதம் அனுப்பிய ஓபிஆர்.. இனி லகான் ஓம்பிர்லா கையில்!
டெல்லி : அதிமுக எம்.பியாக தன்னை கருதக்கூடாது என எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஓ.பி.ரவீந்திரநாத் கடிதம் எழுதியுள்ளார்.
ஓ.பி.ரவீந்திரநாத்தை கட்சியை விட்டு நீக்கியிருப்பதால் அவர் அதிமுக எம்.பி இல்லை என்றும், தன்னிச்சையான எம்.பியாக அறிவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி லோக்சபா சபாநாயருக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. எடப்பாடி பழனிசாமியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என ஓபிஆர் லோக்சபா சபாநாயருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓபிஎஸ் நீக்கம்
அதிமுகவில் ஏற்பட்ட ஓ.பி.எஸ் - ஈபிஎஸ் மோதலால் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டு அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறித்தார் எடப்பாடி பழனிசாமி. எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓபி ரவீந்திரநாத்
அ.தி.மு.க எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத்தும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுக சார்பில் லோக்சபாவில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு எம்.பியான ஓ.பி.ரவீந்திரநாத்தையும் கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. மேலும், ஓ.பி.ரவீந்திரநாத் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் தகவலை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அ.தி.மு.க எம்.பி மற்றும் மக்களவைக் குழுத் தலைவர் என்ற அந்தஸ்துடன் இருக்கும் ஓ.பி.ரவீந்திரநாத்தின் அங்கீகாரத்தைக் குறைக்கும் வகையில் ஈபிஎஸ் ஓம்பிர்லாவுக்கு கடிதம் அனுப்பினார்.

ரவீந்திரநாத் கடிதம்
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை நிராகரிக்கக் கோரி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார் ஓ.பி.ரவீந்திரநாத். அந்தக் கடிதத்தில், எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் ஆனதே செல்லாது என்றும் ஓபிஆர் தெரிவித்துள்ளார்.

வழக்குகள்
எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன, தேர்தல் ஆணையத்திலும் இதுதொடர்பான விவகாரங்கள் இருப்பதால், எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை நிராகரிக்க வேண்டும், தனது எம்.பி பதவியில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என ஓ.பி.ரவீந்திரநாத் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

சபாநாயகர் கையில் முடிவு
எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக உறுப்பினராக இல்லாமல் எந்தக் கட்சியையும் சாராத உறுப்பினராகச் செயல்படுவார். ஓபி ரவீந்திரநாத் கோரிக்கையை ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டால், ஈபிஎஸ்ஸின் கடிதத்தை நிராகரித்து, இப்போதுள்ள நிலையே தொடரும். சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்பது விரைவில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications