உன்னாவ் மர்ம மரணங்கள்... நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
டெல்லி: உன்னாவ் மர்ம மரணங்கள் மற்றும் படுகொலை முயற்சிகள் விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்று கடும் அமளியில் ஈடுபட்டன.
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவில் பாஜக எம்.எல்.ஏமீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இவ்வழக்கில் புகார் தெரிவித்த பெண்ணின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் மர்மமான முறையில் மரணித்து போயினர்.

பாஜக எம்.எல்.ஏ. சிறையில் உள்ள நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார், வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பெண்ணின் தாயார் உள்ளிட்ட 2 பேர் பலியாகினர்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் பாஜக அரசு மீதான வியாபம் ஊழல் வழக்கில் இப்படித்தான் பலரும் மர்மமான முறையில் மரணித்தார்கள். தமிழகத்தில் கொடநாடு கொள்ளை வழக்கிலும் அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நிகழ்ந்தன.
இதனால் இவ்விவகாரம் பெரும் சர்ச்சையானது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்று இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டன. லோக்சபாவில் காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், உன்னாவ் சம்பவங்கள் வெட்கி தலைகுனிய வைக்கின்றன.
லோக்சபாவுக்கு உள்துறை அமைச்சர் வந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இதை அரசியலாக்க வேண்டாம்; சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஆனாலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பியதால் அமளி நீடித்தது.












Click it and Unblock the Notifications