ராஜ்யசபாவில் புயலை கிளப்பிய விவசாயிகள் போராட்டம்...எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
டெல்லி : விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால் அமளி ஏற்பட்டது. இதனால் அவை முதலில் 10.30 மணி வரையிலும், பின்னர் 11.30 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு ராஜ்யசபா இன்று காலை 9.30 மணிக்கு துவங்கியது. அவை துவங்கியதும் ஆர்ஜேடி எம்.பி., மனோஜ் ஜா, விவசாயிகள் போராட்டம் குறித்து பேச வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தினார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த ராஜ்யசபா தலைவர் வெங்கைய்ய நாயுடு, விவசாயிகள் போராட்டம் குறித்து நாளை விவாதிக்கப்படும். இன்று விவாதிக்க முடியாது என கூறி, கேள்வி நேரத்தை துவக்கினார். இருப்பினும் எதிர்க்கட்சிகள் அதனை ஏற்க மறுத்து அமளியில் ஈடுபட்டன.
அப்போது பேசிய வெங்கைய்ய நாயுடு, குடியரசு தலைவர் தனது உரையிலேயே விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வேதனை தெரிவித்துள்ளார். அதனால் இது தொடர்பாக விவாதம் முதலில் லோக்சபாவில் துவங்கப்பட வேண்டும். லோக்சபாவில் விவாதம் துவங்கிய பிறகு, ராஜ்யசபாவிலும் விவாதம் நடைபெறும் என்றார்.
இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர் அமளி காரணமாக அவையை 10.30 மணி வரை ஒத்திவைப்பதாக வெங்கைய்யா நாயுடு அறிவித்தார். ஆனால் மீண்டும் அவை கூடியதும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால், அவையை 11.30 வரை ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.