பாகிஸ்தானில் அஜ்மல் கசாப் பயிற்சி செய்த இடத்தை அழித்தோம்.. இந்திய ராணுவம் செய்தியாளர்களிடம் விளக்கம்
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இந்த குழு லஷ்கர்-இ தொய்பாவுடன் தொடர்புடையது. இதன் மூலம் பாகிஸ்தானின் தொடர்புகள் தெளிவாக நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியா மீது மேலும் சில தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தலாம் என உளவு துறை தகவல் தெரிவித்தன. எனவே இந்தியா தன்னை தற்காத்துக் கொள்ள இருக்கும் உரிமையை பயன்படுத்தியது. தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பை அகற்றும் வகையில் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது என வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார்.
காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. இன்று மாலை இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இன்று அதிகாலை 1:44 மணிக்கு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மற்றும் அவர்கள் செயல்படும் இடங்களை குறிவைத்து இந்தியாவின் முப்படைகள் துல்லிய தாக்குதல்களை நடத்தியது. 'ஆபரேஷன் சிந்தூர்'- என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் தாக்கியது. பாகிஸ்தான் ராணுவ தளங்கள் எதையும் இந்தியா குறிவைக்கவில்லை.
பவல்பூர், முரிட்கே, சியால்கோட், சகாம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும், சியால்கோட், பஹவல்பூர், சக் அம்ரு மற்றும் முரிட்கே உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களிலும் உள்ள தீவிரவாத முகாம்களில் மட்டும் துல்லிய தாக்குதலை இந்தியா நடத்தி இருந்தன. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்த பாதுகாப்பு துறை அமைச்சகம், "சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் மிஷனை முன்னெடுத்தது. அதன்வழி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் மீது தீவிரவாதத் தாக்குதலை தொடுக்கத் திட்டம் தீட்டிய தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தி உள்ளோம்.
மொத்தமாக 9 இடங்களைக் குறிவைத்து தாக்கி உள்ளோம். எங்களின் (இந்திய) ராணுவம் தெளிவாகத் திட்டமிட்டு குறிவைத்து இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறது. பாகிஸ்தான் இராணுவத்தின் முகாம்கள் எதையும் நாங்கள் தாக்கவில்லை. மேற்கொண்டு பதற்றத்தை அதிகரிக்காத வகையில்தான் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பஹல்காமில் தீவிரவாதிகள் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி 25 இந்தியர்களையும் ஒரு நேபாள நாட்டவரையும் சுட்டுக்கொன்றதற்கான எதிர்வினைதான் இந்த சிந்தூர் தாக்குதல். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆபரேஷன் சிந்தூர் பற்றி இன்றைய நாளில் பின்னர் விரிவாக கூறுகிறோம்." இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை இந்திய ராணுவம் சிந்தூர் தாக்குதல் குறித்து நாட்டு மக்களுக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக கூறியிருந்தது.
இதன்படி இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கம் அளித்து வருகிறார்கள். இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறும் போது, காஷ்மீரின் பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது. அப்பாவி மக்கள் மீது கொடூரமான முறையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 26 அப்பாவி மக்களை சுட்டு கொன்றனர். குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையிலேயே துப்பாக்கி சூடு நடத்தினர்.
தாக்குதல் நடத்தியதை பிரதமர் மோடியிடம் தெரிவிக்குமாறும் தீவிரவாதிகள் கூறியிருக்கிறார்கள்.. பஹல்காம் தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இந்த குழு லஷ்கர்-இ தொய்பாவுடன் தொடர்புடையது. இதன் மூலம் பாகிஸ்தானின் தொடர்புகள் தெளிவாக நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியா மீது மேலும் சில தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தலாம் என உளவு துறை தகவல் தெரிவித்தன. தீவிரவாதிகளின் இந்த தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என்று கருதினோம். இந்தியா தன்னை தற்காத்துக் கொள்ள இருக்கும் உரிமையை பயன்படுத்தியது. தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பை அகற்றும் வகையில் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றார்.
கர்னல் சோபியா குரேஷி கூறுகையில், "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவே ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு முழுமையாக அழிக்கப்பட்டன" என்றார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எங்கெல்லாம் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்தும் வீடியோவையும் கர்னல் சோபியா வெளியிட்டார். அதனை தொடர்ந்து பேசிய அவர், "2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி ஆகியோர் முரிட்கே (Muridke) என்ற இடத்தில் பயிற்சி பெற்றனர். அந்த இடத்தையும் தாக்கி அழித்துள்ளோம். பாகிஸ்தானின் ராணுவ சொத்துகள் எதுவும் குறிவைக்கப்படவில்லை. இந்திய ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தானில் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை. தீவிரவாதிகளின் நிலைகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம்" இவ்வாறு கர்னல் சோபியா குரேஷி கூறினார்.












Click it and Unblock the Notifications