ஏவுகணை: இந்தியாவுக்கு பதிலடி கொடுத்திருக்க முடியும்.. ஆனால் சும்மா விட்டோம்.. இம்ரான்கான் சொல்கிறார்
டெல்லி: இந்திய ஏவுகணை தவறுதலாக விழுந்த விவகாரத்தில் உடனே பதிலடி கொடுத்திருக்க முடியும்; ஆனால் பொறுமை காக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருக்கிறார்.
Recommended Video
ராஜஸ்தான் மாநிலத்தின் சூரத்கர் நகரில் இருந்து கடந்த 9-ந் தேதி ஏவுகணை ஒன்று தவறுதலாக விண்ணில் சீறிப் பாய்ந்தது. இந்த ஏவுகணை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மியான் கன் நகர் மீது விழுந்தது. இதில் சில குடியிருப்புகள் சேதமடைந்தன.

ஏவுகணை-பாக். கண்டனம்
இந்திய ஏவுகணை பாகிஸ்தான் பகுதியில் 124 கி.மீ. தூரம் ஊடுருவி விழுந்தது பெரும் சர்ச்சையானது. இச்சம்பவத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. மேலும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் அரசு அழைத்து எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இத்தகைய அலட்சியத்தால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் மிரட்டல் விடுத்தது பாகிஸ்தான்.

மத்திய அரசு விளக்கம்
இதையடுத்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில், பராமரிப்பு பணியின் போது இந்திய ஏவுகணை தவறுதலாக விண்ணில் பாய்ந்தது. பாகிஸ்தான் எல்லையில் விழுந்த இந்த ஏவுகணையால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது ஆறுதல் தரக் கூடியது. இது வருத்தத்துக்கு உரியது. இது தொடர்பாக ராணுவ நீதிமன்றத்தின் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தது.

ஐ.நா.வில் முறையிடுவோம்
ஆனாலும் பாகிஸ்தான் இதை பெரிதுபடுத்திக் கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் விளக்கத்தை நிராகரித்த பாகிஸ்தான், இது மேலோட்டமானது என கூறியது. மேலும் இருதரப்பும் கூட்டாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தியது. அத்துடன் நிற்கவில்லை. இந்த விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசுவோம் என்றது பாகிஸ்தான். பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் குரேஷி கூறுகையில்,ஏவுகணை விவகாரத்தில் இந்தியா எழுத்துபூர்வமாக விளக்கம் தர வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் நாங்கள் முறையிடுவோம் என்றார்.

இம்ரான்கான் மிரட்டல்
இந்த நிலையில் பாகிஸ்தானின் ஹபீசாபாத் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் இம்ரான் கான் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். அக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்ததற்கு உடனே பதிலடி கொடுத்திருக்க முடியும். ஆனால் பொறுமையாக இருந்துவிட்டோம். ராணுவத்தையும் தேசத்தையும் வலிமையடைய செய்ய வேண்டும் என்றார்.ஏற்கனவே இந்தியா-பாகிஸ்தான் இடையே யுத்தங்களும் நிகழ்ந்திருக்கின்றன. இருநாட்டு எல்லைகளில் தொடர் பதற்றமும் நிலவுகிறது. இந்த நிலையில் தவறுதலாக விழுந்த ஏவுகணை விவகாரம் புதிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications