காந்தி குடும்பத்தை தவிர வேறு யாராவது தலைவரானா 24 மணி நேரத்தில் காங்., காலி.. நட்வர் சிங்
டெல்லி: காந்தி என்ற குடும்பபெயரை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்லாமல் வேறு யாரேனும் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்றால், எண்ணி 24 மணி நேரத்திற்குள்ளாகவே காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு நிற்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நட்வர் சிங் கூறியுள்ளார்.
மேலும் தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்லாமல் வேறு யாரையாவது கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என்ற முடிவை, ராகுல் காந்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நட்வர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடைபெற்று முடிந்த மகக்ளவை தேர்தலில் கடந்த 2014-ம் ஆண்டை போல காங்கிரஸ் கட்சி இம்முறையும் படுதோல்வியை தழுவியது. 2017-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்றதால், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த முறையை போலவே இம்முறையும் அக்கட்சியால் எதிர்கட்சி அந்தஸ்தை பெற முடியவில்லை. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று சில மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
தோல்வியால் விரக்தியில் இருந்த ராகுல் காந்தியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கட்சியின் பல மூத்த தலைவர்களும் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. புதிய தலைவரை தேர்வு செய்யும் விவகாரத்திலும் தாம் தலையிட போவதில்லை, தனது குடும்பத்தினர் யாரும் தலைரவர் பதவிக்கு வரமாட்டார்கள் என ராகுல் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதா என நட்வர் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ராகுலின் முடிவு பற்றி கருத்து தெரிவித்துள்ள நட்வர் சிங் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி வரிசையில் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் ஒருவர் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும்.
இல்லையெனில் 24 மணி நேரத்திலேயே கட்சி பிளவுப்பட்டு நிற்கும் என்றார். உத்தரப்பிரதேசத்தில் பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியாகினர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூற முயன்ற பிரியங்கா காந்தி துணிச்சலாக செயல்பட்டார். அவரிடம் காங்கிரஸ் கட்சியை கையாளும் திறன் உள்ளது என்றார் நட்வர் சிங்.
சோன்பத்ராவுக்கு சென்ற பிரியங்கா காந்தி அங்கேயே மக்களுடன் தங்கி போராடியதை நினைத்தால் ஆச்சர்யமாக உள்ளது. ஆனால் கட்சி தலைவராக வேண்டும் என்பது பிரியங்கா காந்தியின் விருப்பத்தை பொறுத்தது. ஏனெனில் ராகுலின் முடிவு வேறாக உள்ளதே என சுட்டிக்காட்டினார்.
நாட்டின் 134 ஆண்டுகள் பழமையான கட்சிக்கு கட்சித் தலைவர் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. காந்தி குடும்பத்தைத் தவிர, யாரையும் கட்சி தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று தாம் நினைக்கவில்லை என நட்வர் சிங் கூறியுள்ளார்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி, பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக நியமிக்க வேண்டும். ஏனெனில் அவரைத் தவிர வேறு யாரும் 100 சதவீதம் ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் என்று கூறியிருந்தார்.
ராகுலிடம் சமாதானம் செய்ய முயன்று தோல்வியுற்ற மூத்த தலைவர்களின் பார்வை தற்போது பிரியங்கா காந்தியின் பக்கம் திரும்பியுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி தலைவராக பிரியங்கா காந்தி பொறுப்பேற்பாரா என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.