இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட்.. எல்லாம் போச்சே.. நீதிமன்ற பணியை விட்டு பார்த்த வக்கீல்கள் புலம்பல்
டெல்லி: உலககோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இன்று இங்கிலாந்திடம் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தது. முன்னதாக இந்த போட்டியை இன்று மதியம் முதல் நீதிமன்ற நடைமுறையை ரத்து செய்துவிட்டு பட்டியாலா மாவட்ட வழக்கறிஞர்கள் பார்த்த நிலையில் இந்தியா தோற்றதால் அவர்கள் புலம்பினர்.
ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை டி20 போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. அரையிறுதி போட்டிக்கு இந்தியா-பாகிஸ்தான், இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் முன்னேறின.
நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றது. இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் 2வது அரையிறுதி போட்டி நடந்தது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின.
இந்தியா தோல்வி: 'மட்டமான ஆட்டம்' கே.எல்.ராகுலின் குடியுரிமையை பறிங்க.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!
இந்தியா திணறல்
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியினர் பேட்டிங்கில் சொதப்பினர். ராகுல், ரோகித், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டர்கள் அடுத்தடுத்து அவுட்டான நிலையில் கோலி அரைசதம் அடித்தார். இறுதியில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி 33 பந்துகளில் 63 ரன்கள் விளாசியதால் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து வெற்றி
அடுத்து இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் துவக்கம் முதலே அதிரடியாக ஆடினர். இருவரும் பவுண்டரி, சிக்சர் என போட்டி போட்டு விளாசினர். இதனால் இங்கிலாந்து அணியின் ரன் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. அதோடு அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் அடுத்தடுத்து அரை சதம் அடித்தனர். இந்திய பவுலர்களின் பந்துவீச்சு துளியும் எடுபடவில்லை. இதனால் விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை. அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 86 ரன்களும்,, ஜோஸ் பட்லர் 49 பந்துகளில் 80 ரன்களுடம் சேர்த்து அணியை வெற்றி பெற செய்தனர். இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இந்தியாவின் கோப்பை கனவு தகர்ப்பு
இதன்மூலம் உலககோப்பை டி20 போட்டியிலும் அரையிறுதியுடன் இந்தியா நடையை கட்டியுள்ளது. மேலும் இறுதி போட்டிக்கு செல்ல முடியாமல் இந்திய அணி ஏமாற்றம் அளித்துள்ளது. அதோடு உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் கோப்பை கனவு இந்தியாவுக்கு தகர்ந்துவிட்டது. இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
பணிகள் ரத்து
இதற்கிடையே தான் இந்தியா-இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டியை காண பட்டியாலா மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்தது. இதனால் இன்று மதியத்துக்கு மேலான நீதிமன்ற நடைமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனை அந்த சங்கத்தின் துணை தலைவர் குல்ஜித் சிங் தாலிவால் உறுதி செய்தார்.
புலம்பல்
இதையடுத்து கிரிக்கெட் போட்டியை அனைவரும் பார்த்தனர். இந்தியா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறும் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் எல்லாம் எதிர்மறையாக நடந்துவிட்டது. இதனால் வழக்கறிஞர்கள் வருத்தமடைந்தனர். சிலர் புலம்பினர். இதற்கிடையே இன்று மதியம் விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.