குலாம் நபி ஆசாத் பற்றி பேசும்போது.. மோடி கண்களில் கண்ணீர்.. ஒரே உருக்கம்.. ராஜ்யசபாவில் நெகிழ்ச்சி!
டெல்லி: ராஜ்யசபா உறுப்பினர் பதவிக் காலம் நிறைவடையும் குலாம் நபி ஆசாசாத்துக்கான பிரிவுபச்சாரத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்டார்.
Recommended Video
ராஜ்யசபாவில் நரேந்திர மோடி பேசியதை பாருங்கள்: இன்று நாடாளுமன்றத்தில் நான்கு முக்கிய உறுப்பினர்கள் பற்றி நான் பேச வேண்டியதாக இருக்கிறது. அந்த நான்கு பேருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு நாடாளுமன்ற அமர்வில் கூட அவர்கள் உரையாற்றாமல் இருந்தது கிடையாது.
சில நேரங்களில் அவர்களின் குடும்பத்தாருடன் நாடாளுமன்றம் வந்துள்ளார்கள். அவர்கள் வழங்கிய தகவல்கள் மிகவும் தனித்துவமானவை. ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் அவர்கள் வழங்கிய பங்களிப்பு அளப்பரியது. நான் பல தசாப்தங்களாக சம்ஷீர் சிங் எப்படிப்பட்டவர் என்பதை உணர்ந்துள்ளேன்.
நான் தற்போது அந்த வருடத்தை மறந்து விட்டேன். ஆனால் ஸ்கூட்டரில் நாங்கள் ஒன்றாக பயணித்து உள்ளோம். எமர்ஜென்சி காலத்தில் இளம் வயதில் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் சம்ஷீர் சிங் ஒருவர். ராஜ்யசபாவில் அவரது வருகை 96 சதவீதமாக இருக்கிறது.
குலாம் நபி ஆசாத் போன்ற ஒருவரின் இடத்தை இன்னொருவரால் எப்படி நிரப்ப முடியும் என்று நான் கவலை அடைகிறேன். தனது கட்சியை பற்றி மட்டும் கிடையாது, ஒட்டுமொத்த நாடு பற்றியும் அவர் எப்போதுமே யோசிப்பார். கொரோனா நோய் பரவல் காலகட்டம் துவங்கியபோது, நாடாளுமன்ற அவையைச் சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்களுடன் நான் சந்திப்பு நிகழ்த்தினேன்.
அப்போது, பிற அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து பேசவேண்டும் என்று குலாம் நபி ஆசாத் எனக்கு யோசனை சொன்னார். அவர் யோசனையை நானும் பின்பற்றினேன். நான் சில வருடங்களுக்கு முன்பு நாடாளுமன்றம் வந்தபோது, தீவிர அரசியலில் இல்லை. அப்போது நானும் குலாம் நபி ஆசாத்தும் நாடாளுமன்ற மாடம் பகுதியில் பேசிக்கொண்டு இருப்போம். பத்திரிகையாளர்களுக்கு இதைப் பார்த்து மிகவும் ஆர்வம் அதிகரிக்கும். அப்போது பத்திரிகையாளர்களிடம் குலாம்நபி ஆசாத் சரியான ஒரு பதிலைச் சொன்னார். டிவிகளில் நாங்கள் ஒருவருக்கொருவர் வாதம் செய்து கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் இந்த நாடாளுமன்ற கட்டிடம் உள்ளே வந்துவிட்டால் நாங்கள் அனைவரும் ஒன்றுதான் என்று தெரிவித்திருந்தார்.
நாங்கள் எப்போதுமே மிகவும் நெருக்கமானவர்கள். நாங்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளாத ஒரு சந்தர்ப்பம் கூட கிடையாது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குஜராத் மாநில சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 8 பேர் கொல்லப்பட்டனர். அப்போது குலாம்நபி ஆசாத்திடமிருந்துதான் முதல் தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த சம்பவம் பற்றி தெரிவிப்பதற்காக இல்லாமல், ஒரு குடும்ப உறுப்பினர் போல அவர் பேசினார்.
தொலைபேசியில் பேசிய போது அவரது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது பாதுகாப்பு அமைச்சராக பிரணாப் முகர்ஜி பதவி வகித்தார். எனவே தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை குஜராத்திற்கு கொண்டு வருவதற்கு தனி விமானம் கொடுக்க முடியுமா என்று நான் கோரிக்கை விடுத்தேன். பிரணாப் முகர்ஜியும், அந்த கோரிக்கையை நிறைவேற்றினார்.
இரவு, மறுபடியும் குலாம்நபி ஆசாத் எனக்கு தொலைபேசியில் அழைத்து பேசினார். இவ்வாறு நரேந்திர மோடி உரையாற்றினார்.
பிப்ரவரி 10 அன்று மிர் முகமது ஃபயாஸ், ஷம்ஷர் சிங், பிப்ரவரி 15ம் தேதி குலாம் நபி ஆசாத் மற்றும் நஜீர் அகமது லாவே ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக் காலம் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டிதான், பிரிவுபச்சார உரையாக மோடி இவ்வாறு பேசினார்.
ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், குலாம்நபி ஆசாத் சுமார் 28 வருடங்களாக பணியாற்றி உள்ளார். இந்த நாடாளுமன்றத்தின் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி குலாம்நபி ஆசாத். முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குலாம்நபி ஆசாத் முன்மாதிரியானவர். மிகவும் தன்மையோடு தனது கருத்துக்களை எடுத்து வைப்பார். ஆனால், முழுக்க முழுக்க எதிரில் இருப்பவர்களை சென்று சேரும் வகையில் அவரது கருத்துக்கள் இருக்கும். ராஜ்யசபா தலைவராக, நான் அவரது சேவையை மறக்க முடியாது. இவ்வாறு வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
ராஜ்யசபா உறுப்பினர் பதவிக் காலம் நிறைவடையும் குலாம் நபி ஆசாசாத்துக்கான பிரிவுபச்சாரத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்டார். ராஜ்யசபாவில் நரேந்திர மோடி பேசியதை பாருங்கள்: இன்று நாடாளுமன்றத்தில் நான்கு முக்கிய உறுப்பினர்கள் பற்றி நான் பேச வேண்டியதாக இருக்கிறது. அந்த நான்கு பேருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மோடி தெரிவித்தார்.