விவசாயிகளுக்கு முக்கிய அலர்ட்.. இந்த திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம்.. வேளாண் துறை அறிவுறுத்தல்
டெல்லி: மத்திய அரசின் பிஎம் கிஷான் திட்டத்தில் நிதி உதவி பெறும் விவசாயிகள் அடுத்த தவணை நிதி ரூ. 2000 பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. பிஎம் கிஷான் திட்டத்தில் 3 தவணையாக ஆண்டுக்கு 6000 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறுவதற்கு தற்போது ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. 12 இலக்கங்களை கொண்ட ஆதார் அடையாள அட்டையில் ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்து இணைக்கப்பட்டுள்ளன.
இதனால், போலிகளை களைந்து நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளுக்கு கிடைப்பதை ஆதார் எண் இணைப்பு எண் மூலம் உறுதிப்படுத்த முடியும் என்று கூறி ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்கள், மானியங்கள் மட்டும் இன்றி வங்கிக் கணக்கு தொடங்க செல்போன் சிம் கார்டு வாங்க வேண்டும் என்றாலும் கூட தற்போது ஆதார் எண்ணே முதன்மையானதாக கேட்கப்படுகிறது.
மின் இணைப்பு + ஆதார் எண் தடை? டெல்லியில் பரபர மூவ்.. 'கேவியட்’ மனு தாக்கல் செய்த தமிழக அரசு!
ஆதார் எண் இணைக்க வேண்டும்
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடனும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து மின் நுகர்வோர்களும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். வரும் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு முழு வீச்சில் ஆதார் மின் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் பிஎம் கிஷான் திட்டத்தில் நிதி உதவி பெறும் விவசாயிகள் அடுத்த தவணை நிதியை பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
ஆண்டுக்கு ரூ.6000 நிதி உதவி
மத்திய அரசு விவசாயிகளுக்கு பிஎம் கிஷான் சம்மன் நிதி யோஜனா என்ற திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நேரடி நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் டிசம்பர் 2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வீதம் மூன்று தவணைகளில் அதாவது 4 மாதங்களுக்கு ஒருமுறை ஆண்டுதோறும் ரூ.6000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
13-வது தவணைத்தொகை பெற
ஏற்கனவே 12 தவணைகள் தகுதிவாய்ந்த விவசாயிகள் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு விட்ட நிலையில், பிஎம் கிஷான் பயனாளிகள் 13-வது தவணைத்தொகை விடுவிப்புக்கு வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பி.எம்கிஷான் திட்டத்தில் இதுவரை ஆதார் எண்ணை இணைக்காத 3 லட்சத்து 56 ஆயிரத்து 186 விவசாயிகள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
அமைச்சர் அறிக்கை
மேலும், ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு முதல் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கபப்ட்டுள்ளது. மத்திய அரசு அறிமுகபப்டுத்தியிருக்கும் பிஎம் கிஷான் திட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் பலன் பெறவேண்டும் என்பதற்காக வேளாண் துறை எடுத்துவரும் இந்த முயற்சிக்கு பயனாளிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.