கொரோனா சிகிச்சை: விளக்கு ஏற்றுவது, ஒலி எழுப்புவது குறித்த விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி விளக்கம்!
டெல்லி: கொரோனா பரவல் அதிகரித்த காலத்தில் விளக்கு ஏற்றுவது, ஒலி எழுப்புவது உள்ளிட்ட நிகழ்வுகள் மீதான விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். இத்தகைய நிகழ்வுகள்தான் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டது. கடந்த 9 மாதங்களில் நாடு முழுவதும் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
சொந்த தடுப்பூசி உற்பத்தி செய்து மகத்தான சாதனை.. 130 கோடி மக்களுக்கும் நன்றி.. பிரதமர் மோடி பெருமிதம்
சீனாவுக்கு அடுத்து இந்தியா
உலக நாடுகளில் சீனாவில்தான் இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தன. இப்போது 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்ட சாதனைப் பட்டியலில் நமது நாடும் இணைந்திருக்கிறது.
புதிய இந்தியா மீதான நம்பிக்கை
இதையொட்டி இன்று நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி ஆற்றிய உரை: நமது நாட்டில் மக்கள் தொகை அதிகம். அதனால் தடுப்பூசிகள் போடுவது எப்படி சாத்தியம் என்கிற கேள்விகளை பலரும் முன்வைத்தனர். நமது நாட்டு மக்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் இன்று இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. புதிய இந்தியாவின் நம்பிக்கை மீதான வெற்றியாக இது பார்க்கப்பட வேண்டும்.
இலவச தடுப்பூசி
நாட்டின் கடைகோடியில் உள்ள குடிமகனுக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கொரோனா பரவலின் தொடக்க காலத்தில் விளக்கு ஏற்றுவது, கை தட்டுவது, ஒலி எழுப்புவது என பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
அறிவியல்பூர்வமான அணுகுமுறை
ஆனால் விளக்கு ஏற்றுவது, ஒலி எழுப்புவது குறித்து அப்போது பலராலும் விமர்சிக்கப்பட்டது. கொரோனாவுக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர்களுக்கு உற்சாகத்தை தரும் வகையில்தான் அந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அந்த உற்சாகத்தின் தொடர்ச்சியாகத்தான் இன்று 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. கொரோனா பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகள் மீதான விமர்சனங்களுக்கு பதில் தரும் வகையில் 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்ட சாதனை நிகழ்ந்துள்ளது. மிகப் பெரிய நாடுகளில் கூட சாத்தியப்ப்படாத ஒன்று சாத்தியமாகி இருக்கிறது. அறிவியல் பூர்வமான அணுகுமுறைகளால் கிடைத்த வெற்றி இது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.