"சொல்றதை கேளுங்க.!" திடீரென ரஷ்ய அதிபர் புதினுக்கு போன் போட்ட பிரதமர் மோடி.. என்ன சொன்னார் தெரியுமா
டெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினிடன் தொலைப்பேசி வாயிலாக உரையாடினார். அப்போது அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.
உக்ரைன் போர் கடந்த பிப். மாதம் தொடங்கிய நிலையில், அதன் பின்னர் போர் முடியாமல் தொடர்ந்து வருகிறது. போர் சில வாரங்களில் முடியும் என்ற உலக நாடுகள் நினைத்த போதிலும் போர் முடியாமல் தொடர்ந்து வருகிறது.
இது ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரஷ்யா போரின் தொடக்கக் காலத்தில் கைப்பற்றிய இடங்களைக் கூட, உக்ரைன் படைகள் இப்போது மீண்டும் கைப்பற்றி வருகிறது.
“மோடி சிறந்தவர்.. அவர் காலத்தில் நாட்டுக்கே பெருமை!” - முஸ்லிம் லீக் காதர் முகைதீன் திடீர் புகழ்ச்சி
பேச்சுவார்த்தை தான் ஒரே தீர்வு
தற்போதைய சூழலில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தோல்வியை ஒப்புக் கொண்டது போல ஆகிவிடும் என்பதாலேயே புதின் போரைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே உக்ரைன் போரில் புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்தும் கூட ஆராய்ந்து வருவதாகச் சமீபத்தில் பகீர் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்தச் சூழலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக உரையாடினார். அதில் உக்ரைன் போர் தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.
மீண்டும் வலியுறுத்தல்
தொலைப்பேசி வாயிலாகப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைனில் நடந்து வரும் மோதலை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று மீண்டும் வலியுறுத்தினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் இரு தலைவர்களும் நேரில் சந்தித்து இருந்தனர். அப்போதும் இந்த நூற்றாண்டு போருக்கான காலம் இல்லை என்று பிரதமர் மோடி புதினிடம் நேரடியாகவே கூறியிருந்தார். இந்தச் சூழலில் இப்போது நடைபெற்றுள்ள தொலைப்பேசி உரையாடலிலும் பிரதமர் மோடி அதையே மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
விரிவான பேச்சுவார்த்தை
இந்த உரையாடலில் எரிசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடுகள், பாதுகாப்பு என பல்வேறு விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாகப் பேசியுள்ளனர். இந்தியா இப்போது ஜி20 தலைமை பதவி ஏற்றுள்ள நிலையில், அதன் நிலை குறித்தும் இந்தியா எந்தப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் என்பது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி புதினிடம் விளக்கினார். அதேபோல ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவின் தலைமை தாங்கும் போது, இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஷாங்காய் மாநாடு
இரு தலைவர்களும் பரஸ்பரம் தொடர்ந்து டச்சில் இருக்கவும் ஒப்புக் கொண்டனர். முன்னதாக கடந்த செப். மாதம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, இது போருக்கான காலகட்டம் இல்லை எனத் தெரிவித்தார். அதற்கு அதிபர் புதின், உக்ரைன் மோதலில் இந்தியாவின் கவலைகள் குறித்து தனக்குத் தெரியும் என்றும், அதை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
இந்தியா நிலைப்பாடு
பிப்ரவரியில் ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடங்கியது. அப்போதில் இருந்தே பிரதமர் மோடி புதினுடன் தொடர்ந்து பேசி வருகிறார்.. போரைத் தவிர்த்துவிட்டு பேச்சுவார்த்தை மூலம் அமைதியை நாட வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இருந்த போதிலும், இந்தியாவும் சரி பிரதமர் மோடியும் சரி போரைப் பகிரங்கமாகக் கண்டிக்கவில்லை. இருப்பினும், ரஷ்யத் தலைவர்களின் அணுசக்தி அச்சுறுத்தல்கள் குறித்து இந்தியா வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்துள்ளது.