வீட்டிற்குள் உறவினர்கள் உள்பட யாரையும் அனுமதிக்காதீர்கள்- பிரதமர் மோடி உரை
டெல்லி: உறவினர்கள் உள்பட யாரையும் அனுமதிக்காதீர்கள் என பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் இன்றிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம். எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும்.
மோடி சொல்ல தவறிய 2 முக்கிய விஷயங்கள்.. எப்படி சமாளிக்கும் இந்தியா?
நாடு முழுவதும் முடக்கம்
கொரோனாவால் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. முழுமையான பொறுப்போடு ஒரு நாள் சுய ஊரடங்கை ஒவ்வொருவரும் கடைப்பிடித்தார்கள். கொரோனா வைரஸை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா நம்மை பாதிக்காது என கருதக் கூடாது. பொருளாதாரத்தை விட உயிர் முக்கியமானது.
உறவினர்கள்
21 நாட்களுக்கு உறவினர்கள் உள்பட வெளியாட்கள் யாரையும் உங்கள் வீடுகளில் சேர்க்காதீர்கள். கொரோனா காட்டுத் தீ போல் பரவி வருகிறது. சுகாதாரமாக இருப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம். கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ 15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என மோடி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1
கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து அமைப்புச் சாரா தொழிலாளர்கள் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு அடித்து பிடித்து சென்றனர். வேலையில்லாத நிலையில் வருமானமும் இல்லாததால் மேன்ஷன் வாடகை, உணவு உள்ளிட்டவைகளுக்கு செலவிட இயலாத சூழலால் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
நாட்டு நலன்
இன்னும் சிலர் தாய் வீடு, தங்கை வீடு, அக்காள் வீடு, உறவினர் வீடு, தாத்தா வீடு, பாட்டி வீடு என சென்றுள்ளனர். இந்த நிலையில் மோடி இவ்வாறு கூறியுள்ளார். எனினும் நாட்டின் பிரதமர் மோடி கொரோனா ஒழிப்புக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் கூறியுள்ளார் என்றே இந்த அறிவிப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். கொரோனாவை ஒழித்தால்தான் அனைத்து உறவினர்களுடனும் நாம் நல்லறவு பேண முடியும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள் மக்களே!