விவசாயி மகன் குடியரசுத் துணைத் தலைவரானது பெருமை - ஜெகதீப் தன்கரை நேரில் வாழ்த்திய பிரதமர் மோடி
டெல்லி: 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது சட்ட அறிவு கொண்ட விவசாயியின் மகன் புதிய குடியரசுத் துணைத் தலைவராக தேர்வானது பெருமைக்குரியது என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்.
அதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிகாலம் முடிவடைய இருப்பதால் 14 வது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
உங்கள் நீண்ட அனுபவம் நாட்டுக்கு பயனளிக்கும் - ஜெகதீப் தன்கரை வாழ்த்திய குடியரசுத் தலைவர் முர்மு
தன்கர் vs ஆல்வா
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டியிட்டார். இந்த நிலையில் இன்று டெல்லியில் நாடாளுமன்றத்திலும் மாநில தலைமைச் செயலகங்களிலும் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அனைத்து மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலையிலிருந்தே வாக்குகளை செலுத்தினர். 5 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
ஜெகதீப் தன்கர் வெற்றி
அதன் தொடர்ச்சியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 725 பேர் வாக்களித்தனர். 92.94% வாக்குகள் பதிவாகின. பாஜக வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளையும் மார்க்கரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்று உள்ளார். 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் ஜெகதீப் தன்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்த தேர்தலில் வெற்றிபெற்ற ஜெகதீப் தன்கரின் வாக்கு வித்தியாசம் இதுவரை இல்லாத அளவு அதிகம் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.
பிரதமர் மோடி வாழ்த்து
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வென்ற ஜெகதீப் தன்கரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "கட்சிகளை கடந்து ஆதரவை பெற்று வென்ற ஜெகதீப் தன்கரை வாழ்த்துகிறேன். மிகச்சிறந்த குடியரசுத் துணைத் தலைவராக அவர் இருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். ஜெகதீப் தன்கரின் அறிவு மற்றும் ஞானத்தால் நாடு பயன்பெறும். 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது சட்ட அறிவு கொண்ட விவசாயியின் மகன் புதிய குடியரசுத் துணைத் தலைவராக தேர்வானது பெருமைக்குரியது." என்று பதிவிட்டு உள்ளார்.