பாமகவில் அதிகாரப் போர்.. "தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற போலியான ஆவணம்!" அன்புமணி மீது பகீர் குற்றச்சாட்டு!
டெல்லி: பாமகவில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கிடையே டெல்லி போலீஸ் நிலையத்தில் இப்போது திடீரென அன்புமணி மீது புகாரளிக்கப்பட்டுள்ளது. பதவிக்காலம் முடிந்த பிறகும் பாமக தலைவராக அன்புமணி இருப்பார் எனச் சொல்லி போலியான ஆவணத்தைத் தேர்தல் ஆணையத்திற்குக் கொடுத்துள்ளதாக ராமதாஸ் தரப்பு டெல்லி போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளது.
பாமகவில் கடந்த சில காலமாகவே உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. அங்கு தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான மோதல் காரணமாக கட்சி இரண்டாகப் பிளவுபட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில் பாமகவில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது அக்கட்சித் தொண்டர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

அன்புமணி
இந்த விவகாரத்தில் முன்பு அன்புமணி தரப்பில் சில ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தரப்பட்டிருந்தது. அந்த ஆவணங்களை ஏற்று, அடுத்தாண்டு வரையிலும் பாமக தலைவராக அன்புமணியே செயல்படுவார் எனத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இருப்பினும், இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு நீதிமன்றம் சென்றது. அதில் டெல்லி உயர் நீதிமன்ற முக்கிய தீர்ப்பைக் கொடுத்திருந்தது.
அதாவது பாமக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி இல்லை என்பதால் அதில் தலைவர் யார் என்பதைத் தேர்தல் ஆணையம் தீர்மானிக்க முடியாது என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது. மேலும், இந்த விவகாரத்தை சிவில் நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் அதுவே சரியாக இருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. டெல்லி ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பை ராமதாஸ் தரப்பினர் கொண்டாடி வருகிறார்கள்.
டெல்லி போலீசாரிடம் புகார்
இதற்கிடையே நேற்றைய தினம் அன்புமணி மீது டெல்லி போலீசாரிடம் ராமதாஸ் தரப்பு புகார் அளித்துள்ளது. ராமதாஸ் சார்பாக இந்தப் புகாரை ஜி.கே.மணி அளித்தார். 2026 வரை அன்புமணியே பாமக தலைவராக இருக்கிறார் எனச் சொல்லி போலியான ஆவணத்தைத் தேர்தல் ஆணையத்திடம் வழங்கி இருப்பதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி போலீசாரிடம் இது குறித்த புகாரை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் ஆதரவாளர் ஜி.கே.மணி, "அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. ஆனாலும், போலியான ஆவணத்தைத் தயாரித்து அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளனர். பதவிக்காலம் முடிந்த பிறகும் கூட 2026 வரை அன்புமணியே தலைவர் எனப் போலியான ஆவணத்தை உருவாக்கியுள்ளனர்.
ஜிகே மணி
ஏற்கனவே இது தவறு எனச் சொல்லிப் பல ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தோம். இருப்பினும், அதை ஏற்காமல் தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு ஆதரவான உத்தரவைப் பிறப்பித்தது இல்லை. இது பெரிய மோசடி.. தேர்தல் ஆணையம் இப்படிச் செய்தது சரி இல்லை. தேர்தல் ஆணையம் இப்படி நடந்து கொண்டால் மக்களுக்கு எப்படி அந்த அமைப்புகள் மீது நம்பிக்கை வரும்!" என்றார்.
மேலும், அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பாமக சார்பில் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையே ராமதாஸே நடத்துவார் என்றும் ஜிகே மணி தெரிவித்தார். மேலும், பாமக விவகாரம் தொடர்பாகத் தேவைப்பட்டால் சிவில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.
மறுப்பு
அதேநேரம் ராமதாஸ் தரப்பினர் இந்தக் குற்றச்சாட்டுகளை அன்புமணி தரப்பு திட்டமிட்டு மறுத்தே வருகிறது. இரு தரப்பும் இப்படி மாறி மாறி மோதிக் கொள்வதால் பாமக தொண்டர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications