காங். அலுவலகத்திற்கு உள்ளேயே புகுந்த போலீஸ்.. டெல்லியில் பரபரப்பு.. கொத்தாக தூக்கப்பட்ட நிர்வாகிகள்!
டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்திற்கு இடையில் காங்கிரஸ் தலைமையகத்திற்கு உள்ளேயே போலீசார் புகுந்து சில நிர்வாகிகளை கைது செய்து அழைத்து சென்றனர். காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே இந்த சம்பவம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இன்றும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர் இன்றும் அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார்.
இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு 4 மாதங்கள் தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்!
நேற்று மற்றும் நேற்று முதல் நாள் ராகுல் காந்தி அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜர் ஆனார். அப்போது அவரிடம் மொத்தமாக 21 மணி நேரம் கேள்விகள் கேட்கப்பட்டது.
போராட்டம்
இரண்டு நாட்களும் காலை 9 மணிக்கு தொடங்கிய விசாரணை, பல்வேறு இடைவெளிகளுடன் இரவு வரை நடைபெற்றது. இன்று மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களாக ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுக்க அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன் போராட்டம் செய்தனர். டெல்லியில் பல மாநில காங்கிரஸ் தலைவர்கள் களமிறங்கி போராட்டங்களை மேற்கொண்டனர்.
நிர்வாகிகள் வீடு
முதல் நாள் போராட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட், சட்டீஸ்கர் முதல்வர் புபேந்திர சிங் பாகல், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ரன்தீப் சிங் சுர்ஜ்வலா, கேசி வேணுகோபால், அதிர் ரஞ்சன் சவுத்திரி, திக்விஜய் சிங், முகுல் வாஸ்னிக், ஜெயராம் ரமேஷ் ஆகியோர் போராட்டத்தின் போது போலீஸ் மூலம் அப்புறப்படுத்தப்பட்டனர். நேற்று போராட்டத்தை தடுக்கும் விதமாக நிர்வாகிகள் அவர்களின் வீட்டு வாசலிலேயே கைது செய்யப்பட்டனர்.
உள்ளே புகுந்து கைது
பலரின் வீடுகளுக்கு உள்ளேயே சென்று நேற்று போலீசார் கைது செய்தனர். இன்றும் காங்கிரஸ் போராட்டத்தை தடுக்கும் விதமாக நிர்வாகிகள் பலர் அவர்கள் வீட்டு வாசலில் கைது செய்யப்பட்டனர். ஆனால் அதையும் மீறி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட எம்பி ஜோதிமணி, ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, ஸ்ரீனிவாஸ் பிவி ஆகியோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அங்கு தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
இன்றும் கைது
இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்திற்கு இடையில் காங்கிரஸ் தலைமையகத்திற்கு உள்ளேயே போலீசார் புகுந்து சில நிர்வாகிகளை கைது செய்து அழைத்து சென்றனர். காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே இந்த சம்பவம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக கட்சி அலுவலகத்திற்கு உள்ளே சென்று இப்படி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது. ஆனால் அதையும் மீறி கைது நடவடிக்கை செய்யப்பட்டு இருக்கிறது.
கட்சி அலுவலகம்
தனியார் ராணுவம் போல டெல்லி போலீஸ் செயல்படுவதாக கார்த்தி சிதம்பரம் எம்பி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து கே.சி.வேணுகோபால், பூபேஷ் பாகேல், ரந்தீப் சுர்ஜேவாலா மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் காங்கிரஸ் அலுவலகத்தில் ஆலோசனை செய்து வருகிறார்கள். கட்சி அலுவலகத்திற்குள் புகுந்தது தவறு என்பது தொடர்பாக இவர்கள் ஆலோசனை செய்து வருகிறார்கள். நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கியது ஆகும்.
எதிர்ப்பு
இந்நிறுவனத்தின் பங்குகளை வெறும் ரூ.50 லட்சத்துக்கு 2010ல் சோனியா, ராகுல் இயக்குனர்களாக உள்ள யங்இந்தியா நிறுவனம் வாங்கியது. நேஷனல் ஹெரால்ட் பங்குகளை வாங்கியது பற்றி அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் மற்ற பங்குதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை, இதில் கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளது என்பதே புகார். பல கோடி இதில் மோசடி நடந்ததாக புகார் உள்ள நிலையில்தான் இந்த விசாரணை நடந்து வருகிறது.