காரின் அடியில் "அஞ்சலி" சிக்கியிருந்தது தெரியாதா? "இது மட்டும்" இடிக்குதே.. டெல்லி கொலையில்.. ஷாக்!
டெல்லி: தலைநகர் டெல்லியில் புத்தாண்டு இரவு அன்று கார் விபத்தில் சிக்கியதில் 20 வயது மதிக்கத்தக்க அஞ்சலி எனும் இளம்பெண் கொடூரமான முறையில் உயிரிழந்த நிலையில், காரை ஓட்டி வந்தவர்கள் மற்றும் அதில் பயணித்தவர்கள் என அனைவருக்கும் உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
புத்தாண்டு அன்று இரவு டெல்லியில் நடந்த விபத்தானது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதாவது, அன்று இரவு டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. அஞ்சலியும் அவரது தோழி நிதியும் புத்தாண்டு இரவு அன்று வெளியில் கிளம்பியுள்ளனர். தங்களது நண்பர்களை சந்தித்துவிட்டு இருவரும் வீடு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.
விபத்தில் அஞ்சலி உயிரிழந்த நிலையில் நிதி உயிர் பிழைத்துள்ளார். மட்டுமல்லாது அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. அஞ்சலி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக அவரது தாயார் குற்றம் சாட்டியிருந்தார். விபத்து நடந்ததாக சொல்லப்படும் பகுதியிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில்தான் அஞ்சலியின் உடல் கிடந்திருக்கிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
டெல்லி இளம்பெண் வழக்கில் புதிய ட்விஸ்ட்.. தனியாக செல்லவில்லை..விபத்து நடந்ததும் தப்பி ஓடிய தோழி?
சண்டை
உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு குறித்து விசாரணை செய்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருந்தார். முதலில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை தொடங்கியது. அஞ்சலியும் நிதியும் சம்பவம் நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் ஓட்டலில் இருந்துள்ளனர். ஆனால் அங்கேயும் அவர்கள் சண்டையிட்டுள்ளனர். இதனை ஓட்டல் உரிமையாளர் பார்த்து இருவரையும் விலக்கி விட்டுள்ளார்.
சமாதானம்
அங்கிருந்து வெளியே வந்த பின்னரும் இருவரும் சண்டையிட்டுக்கொண்டே இருந்துள்ளனர். இருவருமே குடி போதையில் இருந்ததாக உரிமையாளர் கூறியுள்ளார். இது குறித்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியுள்ளன. அப்போது மணி 1.36. இதனையடுத்து பைக்கை யார் ஓட்டுவது என்று சண்டை வந்துள்ளது. பின்னர் அஞ்சலி பைக்கை ஓட்டியுள்ளார். சுல்தான்புரி பகுதியில் நிதியை இறக்கி விட்டுவிட்டு அஞ்சலி வீடு திரும்புவதற்காக நிதியின் வீட்டை விட்டு கொஞ்ச தூரம் வந்திருக்கிறார். அப்போதுதான் அடையாளம் தெரியாத கார் ஒன்று அஞ்சலியின் பைக் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
விபத்து
இதில் அஞ்சலி அந்த காரின் முன்பக்க இடதுபுற சக்கரத்தின் அடியில் சிக்கிக்கொண்டார். அங்கிருந்து சுமார் 12 கி.மீ வரை கார் சென்றிருக்கிறது. அவ்வளவு தூரமும் அஞ்சலியை கார் இழுத்துச் சென்றிருக்கிறது. அதன் பின்னர் உடல் கீழே விழுந்திருக்கிறது. விபத்து நடந்த நேரம் நள்ளிரவு 1.32. இது காவல்துறையினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அதாவது 1.36க்கு ஓட்டலிலிருந்து கிளம்பியவர்கள் எப்படி 1.32க்கு விபத்தில் சிக்கியிருக்க முடியும்? என்று யோசித்தனர். அதன் பின்னர் நடைபெற்ற சோதனையில் கடையில் இருந்த சிசிடிவி சுமார் 45 நிமிடம் வேகமாக இயங்கி வந்தது தெரிய வந்தது. அதேபோல மற்றொரு கேள்வி காவல்துறையினருக்கு எழுந்தது. அதாவது காரில் அடியில் அஞ்சலி சிக்கியிருப்பது எப்படி காரில் உள்ளே இருப்பவர்களுக்கு தெரியாமல் இருந்தது என்பதுதான் அது.
விசாரணை
இது குறித்து கார் ஓட்டுநர்கள் மற்றும் அதில் பயணித்தவர்களிடையே விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. தீபக் கண்ணா என்பவர்தான் காரை ஓட்டி வந்துள்ளார். ஆனால் கார் அவருடையது அல்ல. டெல்லியின் ரோகினி பகுதியில் வசிக்கும் அசுதோஷு எனும் நபருக்கு இந்த கார் சொந்தமானதாகும். இவர்கள் இருவரும் நண்பர்கள். புத்தாண்டை கொண்டாட தீபக் காரை கடன் வாங்கியுள்ளார். எல்லாம் சரி ஆனால் ஏன் காரை மீண்டும் நண்பரிடம் ஒப்படைக்கவில்லை என்று காவல்துறையினர் கேட்டதற்கு, நள்ளிரவு 2 மணிக்கு மேல் ஆகிவிட்டது என்றும் எனவே காலையில் ஒப்படைத்துள்கொள்ளலாம் என்று இருந்துவிட்டதாகவும் தீபக் கூறியுள்ளார்.
உண்மை கண்டறியும் சோதனை
காரின் அடியில் அஞ்சலி மாட்டிக்கொண்டது குறித்து கேட்டபோது அப்படி எதுவுமே எங்களுக்கு தெரியவில்லை என்று காரில் பயணித்தவர்கள் கூறியுள்ளனர். அஞ்சலியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும், மது அருந்தி இருக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 12 கி.மீ உடல் இழுத்துச்செல்லப்பட்டதால் மண்டை ஓடு உடைந்து மூளை பாதி காணாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதேபோல அஞ்சலியின் உடல் முழுவதும் சுமார் 40 காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் உண்மை அறியும் சோதனையும்(polygraph), கார் ஓட்டும் போது போதை பொருள் ஏதேனும் கலந்திருக்கிறார்களா?(narco) என்பது குறித்தும் சோதனை மேற்கொள்ளப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.