குடியரசுத் தலைவர் நாளை கர்நாடகா பயணம் - மைசூர் தசரா திருவிழாவை தொடங்கி வைக்கிறார்!
டெல்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 3 நாட்கள் பயணமாக நாளை கர்நாடகா செல்கிறார். குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக அவர் கர்நாடக மாநிலத்திற்கு வருகை தரவுள்ளார். மைசூரில் புகழ்பெற்ற தசரா திருவிழாவை, நாளை தொடங்கி வைக்கிறார்.

கர்நாடகா மாநிலம் மைசூரில், உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, 10 நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். மைசூர் தசரா விழாவைக் காண்பதற்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். இதனால் 10 நாட்களும், மைசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா, கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தற்போது வழக்கமான உற்சாகத்துடன் வரும் திங்கட்கிழமை (நாளை) மைசூர் தசரா திருவிழா கோலாகலமாகத் தொடங்கி, அடுத்த மாதம் 5-ம் தேதி வரை, 10 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், தசரா திருவிழவையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 3 நாட்கள் பயணமாக நாளை கர்நாடக மாநிலத்திற்கு வருகை தரவுள்ளார். குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக அவர் கர்நாடக மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
மைசூர் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார். பின்னர், இந்த ஆண்டுக்கான மைசூர் தசரா விழாவை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைக்கிறார். பின்னர், அன்றைய தினம், ஹூபாலியில் ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள 'பவுர சன்மனா' என்ற விழாவிலும் குடியரசுத் தலைவர் கலந்துகொள்கிறார். தார்வாட்டில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார்.
வரும் 27-ம் தேதி, பெங்களுருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின்கள் உற்பத்தியையும் குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, தென்மண்டல நச்சு நுண்மவியல் (வைராலஜி) நிறுவனத்திற்கு காணொலி மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர், செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் தொடக்க விழாவிலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார். மேலும், பெங்களுருவில் அவரைக் கவுரவித்து கர்நாடக அரசு சார்பில் வழங்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். 3 நாட்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, வரும் 28-ம் தேதி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மீண்டும் தலைநகர் டெல்லிக்கு திரும்பவுள்ளார்.












Click it and Unblock the Notifications