தனியார் மருத்துவமனைகள் பெற்றது 1.29 கோடி தடுப்பூசிகள்.. யூஸ் பண்ணியதோ வெறும் 22 லட்சம்.. ஷாக் தகவல்
டெல்லி: மே மாதத்தில் மட்டும் தனியார் மருத்துவமனைகள் 1.29 கோடி தடுப்பூசி டோஸ்களை பெற்றன. அதில் 22 லட்சம் மட்டுமே பயன்படுத்தியதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் வந்துவிட்டது என்றே கூறலாம். சில வாரங்களுக்கு முன்பு தினமும் 3,00,000-ஐ தாண்டி சென்ற தொற்று தற்போது 90,000-க்கும் கீழே சென்று விட்டது.
கொரோனாவை தடுக்கும் ஒரே பேராயுதமான தடுப்பூசிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் போடப்பட்டு வருகின்றன.

தடுப்பூசிகள் தட்டுப்பாடு
தொடக்க காலத்தில் தடுப்பூசிகள் போடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை. தடுப்பூசி மீது அதிகம் சந்தேகம் கொண்டனர். இதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஏராளமான தடுப்பூசிகள் பயன்படுத்தாமல் வீணாகிப் போயின. தற்போது தடுப்பூசிகள் போடுவதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் போதிய தடுப்பூசிகள் இல்லை.

வீணாக்கிய தனியார் மருத்துவமனைகள்
தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மே மாதத்தில் தனியார் மருத்துவமனைகள் அதிக அளவு தடுப்பூசிகள் பெற்ற போதிலும் அதில் 17 சதவீத அளவு மட்டுமே பயன்படுத்திய அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. ஜூன் 4 ம் தேதி சுகாதார அமைச்சின் செய்திக்குறிப்பின்படி மே மாதத்தில் நாடு முழுவதும் மொத்தம் 7.4 கோடி தடுப்பூசி அளவுகள் கிடைத்தன.

வெறும் 22 லட்சம் மட்டுமே
அவற்றில் 1.85 கோடி டோஸ் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் 1.29 கோடி தடுப்பூசி டோஸ்களை பெற்றன. அதில் வெறும் 22 லட்சம் மட்டுமே மக்களுக்கு போடப்பட்டுள்ளன. அதாவது வாங்கிய அளவில் வெறும் 7 சதவீத அளவு தடுப்பூசிகள் மட்டுமே தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்தியதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரணம் என்ன?
நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகின்றன. இதனை ஒப்பிடுகையில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசிகள் செலுத்த தயக்கம் காட்டி வருகின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications