வாரணாசியில் பிரதமருடன் மல்லுக்கட்ட தயாராகிறார் பிரியங்கா? வேட்பாளரை அறிவிக்காததன் பின்னணி இதுதானோ!
டெல்லி: வாரணாசியில் பிரதமரை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 11-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஆளும் கட்சிக்கு எதிராக ஒரு யுத்தத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன.
இதனால் வேட்பாளர்கள் தேர்விலும் தொகுதி தேர்விலும் மிகவும் கவனமாக கையாள்கின்றன.
வாரணாசி
கடந்த 2014-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சொந்த மாநிலமான குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியிலும் மோடி போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் அவர் வதோதரா தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு வாரணாசியின் எம்பியாக நீடித்தார்.
இறுதி கட்ட தேர்தல்
இந்த நிலையில் அவர் மீண்டும் வாரணாசியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிடுவது யார் என்று காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது. இறுதிக் கட்ட தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெறுகிறது.
18 தொகுதிகள்
இதற்காக பெரும்பாலான மாநிலங்களில் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துவிட்டது. வாரணாசியிலும் மே 19-ஆம் தேதிதான் தேர்தல் நடைபெறுகிறது. நேற்றைய தினம் மாநிலத்தின் 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.
வலுவான வேட்பாளர்
அதில் வாரணாசியில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிக்கப்படவில்லை. வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடும் அளவுக்கு வலுவான வேட்பாளர் குறித்து காங்கிரஸ் ஆலோசனை நடத்தி வருகிறது.
கங்கையில் படகு பயணம்
இதனால் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை வாரணாசியில் போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அண்மையில் நேரடி அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட பிரியங்கா, கங்கையில் 3 நாட்கள் படகு பயணம் மேற்கொண்டு மக்களோடு மக்களாக பழகினார்.
இஷ்டம்
மேலும் அமேதி, ரேபரேலி உள்பட மற்ற தொகுதிகள் இருக்க பிரியங்கா முதல் முறையாக வாரணாசியில் பிரச்சாரத்தை தொடங்கினார். இதனால் அவர் போட்டியிடலாம் என தெரிகிறது. வாரணாசியில் பிரியங்கா போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு ராகுல் காந்தி மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் அது அவர் இஷ்டம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.