ஏமாற்றம் பெருத்த ஏமாற்றம்... மக்களவை தேர்தலில் பிரியங்கா போட்டியிடவில்லையாம்!
டெல்லி: பிரியங்கா காந்தி மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என கட்சியினரிடையே அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் இணைந்து தேர்தலை சந்திப்பதாக அறிவித்துள்ளனர்.
இதனால் காங்கிரஸ் தனித்து விடப்பட்டது. இதையடுத்து உத்தரப்பிரதேச கிழக்கு பிராந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.
பிரியங்கா காந்தி
இந்த நிலையில் மாநில மக்களுக்கு நன்கு பரிட்சயமான அவர் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் சோனியாவின் உடல் நலம் கருதி தலைவர் பதவி ராகுலுக்கு வழங்கப்பட்டது போல், சோனியாவின் தொகுதியான ரே பரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என கூறப்பட்டது.
இந்திராவின் தொகுதி
மேலும் ராஜீவ் காந்தி தொகுதியான அமேதியில் ராகுல் தன்வசப்படுத்திக் கொண்டது போல் மாமியார் இந்திராவின் தொகுதியான ரே பரேலியில் சோனியா தொடர்ந்து போட்டியிட்டு வருவதை போல் பிரியங்காவும் அந்த தொகுதியை தன்வசமாக்கிக் கொள்வார் என கூறப்படுகிறது.
விருப்பமில்லை
இந்த நிலையில் ரேபரேலி, அமேதி தொகுதிகளின் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் பிரியங்கா காந்தியை நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். அப்போது மக்களவை தேர்தலில் போட்டியிட பிரியங்காவுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் அவரோ போட்டியிட விரும்பமில்லை என தெரிவித்துவிட்டார். தற்போது கட்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் 2022-ஆம் ஆண்டு உ.பி. தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க உழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
களநிலவரங்கள்
பிரியங்காவிடம் பலமுறை கோரிக்கை விடுத்த நிலையில் அவர் முடியாது என கூறிவிட்டார். சிறிய ஆலோசனைகள் என்ற பெயரில் ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பை பிரியங்கா உருவாக்கியுள்ளார். அதில் களநிலவரங்களை தெரிவிக்குமாறு தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.