போராடும் விவசாயிகள்... தேச விரோதிகளை போல நடத்தப்படுகிறார்கள்... கொந்தளிக்கும் எதிர்க்கட்சி எம்பிகள்
டெல்லி: விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் தேச விரோதிகளைப் போல நடத்தப்படுகிறார்கள் என்று காசிப்பூர் போராட்ட களத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் கடந்த இரண்டு மாத காலமாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், விவசாய சட்டங்கள் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்,
அதிலும் குடியரசு தின டிராக்டர் பேரணிக்குப் பின்னர் விவசாயிகள் போராட்டத்தில் பதற்றம் அதிகரித்து. மேலும், அங்கு இணையச் சேவைகளையும் அரசு முடக்கியுள்ளது. தடுப்புகள், முள்வேலி என பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி எம்பிகள்
இந்நிலையில், இன்று 10 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காசிப்பூர் எல்லையில் போராடும் விவசாயிகளைச் சந்திக்கச் சென்றனர். ஷிரோமணி அகாலிதளத்தின் ஹர்சிம்ரத் கவுர் பாதல், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சூலே, திமுகவின் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் காசிப்பூர் சென்றிருந்தனர்.
அதிர்ச்சி
இது குறித்து ஷிரோமணி அகாலிதளத்தின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறுகையில், "காசிப்பூர் பகுதியைச் சுற்றி, அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையே எங்களால் முதலில் பார்க்க முடிந்தது. இங்கு விவசாயிகள் நடத்தப்படும் முறையை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. கான்கிரீட் தடைகள், முள்வேலிகளுக்கு பின்னாள், விவசாயிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு மின்சாரம் இல்லை. குடிநீர்கூட முறையாக இல்லை. அவ்வளவு ஏன், விபத்து ஏதேனும் நடந்தால் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படையினரால் கூட போராட்டம் நடைபெறும் இடத்திற்குள் செல்ல முடியாது.
தேசவிரோதிகள்
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்து எங்களால் பேச முடியவில்லை. நாடாளுமன்றத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்துப் பேச எங்களைச் சபாநாயகர் அனுமதிக்க மறுக்கிறார். அதனால்தான் இப்போது இங்கு வந்துள்ளோம். இப்போது எங்களால் விவசாயிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதைத் தெளிவாக விளக்க முடியும். இங்கு விவசாயிகள் இந்தியர்களைப் போல நடத்தப்படுவதில்லை. தேச விரோதிகள் போலவும் வெளிநாட்டுக் குடிமக்கள் போலவுமே நடத்தப்படுகிறார்கள்" என்றார்.
மத்திய அரசு திட்டவட்டம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு, மூன்று விவசாய சட்டங்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. அப்போதே இச்சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் வலியுற்தித்தின. இருப்பினும், பாஜக அரசுக்கு இருக்கும் பெரும்பான்மை காரணமாக இச்சட்டங்கள் எளிதில் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளின் போராட்டத்திற்குப் பின்னரும்கூட, இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என்றே மத்திய அரசு தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.