பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடுக்கு காவல்துறை அதிகாரிதான் காரணம்; விசாரணை குழு அறிக்கை
டெல்லி: கடந்த ஜனவரியில் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றிருந்த போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக 5 பேர் கொண்ட குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதன்படி, அம்மாநில காவல்துறை உயர் அதிகாரி SSP தனது பணியை சரிவர செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது. அதேபோல அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 5 பேர் கொண்ட குழுவை ஓய்வு பெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் உச்சநீதிமன்றம் நியமித்திருந்தது.
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கப் பிரதமர் மோடி கடந்த ஜன. 5ஆம் தேதி பஞ்சாப் சென்றிருந்தார். அப்போது அவர் சென்ற பாதுகாப்பு வாகனம் பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலம் ஒன்றில் போராட்டகார்கள் மறியலில் ஈடுபட்டதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் தவித்து நின்றது. பிரதமரின் கார் சுமார் 20 நிமிடங்கள் வரை நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டுத் திரும்பினார்.
இது அப்பட்டமான பாதுகாப்பு விதிமீறல் என 'லாயர்ஸ் வாய்ஸ்' அமைப்பு சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் 5 பேர் விசாரணை குழுவை அமைத்தது. இதில் பஞ்சாப் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர், பஞ்சாப் டிஜிபி, சண்டிகர் டிஜிபி மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இந்த குழு இன்று உச்சநீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், ஃபெரோஸ்பூர் எஸ்எஸ்பி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டார் என்று குற்றம்சாட்டியுள்ளது. பிரதமர் அந்த வழியாக வருவார் என்று 2 மணி நேரத்திற்கு முன்னரே எஸ்எஸ்பிக்கு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரிடம் போதிய கால அவகாசம் மற்றும் போதிய ஆட்கள் எண்ணிக்கை இருந்தும் அவர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறிவிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. இது அப்பட்டமான விதி மீறல் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு மீறல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மேம்பாலத்தில் காத்திருந்த 20 நிமிடங்களில் அந்த பாதை வழியே தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. அப்போது பஞ்சாப் மாநிலம் தேர்தலை எதிர்கொண்டிருந்த காலம் என்பதால், ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சிதான் இதற்கு முழு பொறுப்பு என பாஜகவும் மத்திய அரசும் விமர்சித்தன. ஆனால் வான் வழியாக வர இருந்த பிரதமர் திடீரென தரை மார்கமாக வருவதை எதிர்பார்க்காததால் இந்த பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக பல்வேறு தரப்பினர் விளக்கமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications