கேந்திரிய வித்யாலயாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோட்டாவில் மாணவர் சேர்க்கைக்கு தடை - என்ன காரணம்?
டெல்லி: மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பிக்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ராணுவ வீரர்கள், மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டவர்களின் குழந்தைகள் அதிகளவில் பயின்று வருகின்றனர். மாணவர் சேர்க்கையில் அவர்களுக்கே முன்னுரிமையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இதை தவிர்த்து சிறப்பு ஒதுக்கீடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 இடங்கள் வழங்கப்பட்டு வந்தன. அதன் மூலம் தங்கள் தொகுதிகளை சேர்ந்த 10 மாணவ மாணவிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்து வந்தனர்.

பெற்றோர்களும் எம்.பிக்களிடம் பரிந்துரை கடிதத்தை பெற்று தங்கள் பிள்ளைகளை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனை பயன்படுத்தி சில எம்.பிக்கள் பெற்றோரிடம் பணம் பெற்றுக்கொண்டு பரிந்துரை கடிதம் வழங்குவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இந்த நிலையில், எம்.பிக்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள தடை விதிப்பதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மத்திய கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. 2022 - 2023 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஏப்ரல் 21 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications